பிரபல அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தொடர்புபட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள்,ஆதாரங்கள் தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி கூட்டணியால் கடந்த 03-05-2022 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின . தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதில் உள்ள எவரும் தப்பிக்க முடியாது என்றும் இந்த கூட்டணியால் அறிவிக்கப்பட்டது .ஆனால் இன்றுவரை அது நடந்ததா?
—-கே.பாலா
கடந்த மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ”எதிர்வரும் மே 25ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பு வரும்போது கைதட்டுவதற்குத் தயாராக இருங்கள்” என முக்கிய நீதிமன்றத் தீர்ப்பு குறித்து முன்கூட்டியே கருத்துத் தெரிவித்திருந்தார். இது நீதித்துறையின் சுயாதீனத்தன்மையில் மேற்கொள்ளப்பட்ட நேரடித் தலையீடு எனவும், நீதிமன்ற அவமதிப்பு எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.அத்துடன் தற்போதைய அரசாங்கம் தமது முக்கிய அரசியல் எதிரிகளை பழிதீர்க்கும் வகையிலேயே வழக்குகளைத் தாக்கல் செய்வதாகவும் கைதுகளை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இந்தக்குற்றச்சாட்டுக்களை எழுந்தமானமாக மறுத்துவிடவும் முடியாது. ஏனெனில் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோது முன்வைத்த பல பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்கள் கண்டுகொள்ளவில்லை .அல்லது அவற்றை கையில் எடுக்க விரும்பவில்லை என்பதே உண்மை. தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய , மக்களைக்கவரக்கூடிய, ஊடகங்களின் கவனத்தை பெறக்கூடிய. தமது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை திசைதிருப்பக்கூடிய விடயங்களை தெரிந்தெடுத்தே இந்த அரசாங்கம் வழக்குகளைத் தொடுக்கின்றது. கைதுகளை மேற்கொள்கின்றது.
இதற்கு உதாரணமாக ,சாட்சியாக அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்தபோது வெளியிட்ட ஆவணம் ஒன்று கூட உள்ளது. கடந்த 03-05-2022 அன்று பிரபல அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தொடர்புபட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்கள் தேசிய மக்கள் சக்தி -மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கூட்டணியால் பகிரங்கப்படுத்தப்பட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதில் உள்ள எவரும் தப்பிக்க முடியாது என்றும் இந்த கூட்டணியால் அறிவிக்கப்பட்டது
நாட்டை சீரழித்த திருடர்களை மொத்தமாக வெளிப்படுத்தல்´ எனும் தொனிப்பொருளில் இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டன.ஜே.வி.பியின் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களை கொண்ட 500 க்கும் மேற்பட்ட கோப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டன.அதில் குறிப்பாக பிரான்ஸ் ஏர் பஸ் ஒப்பந்தம், ஜின் நில்வளா திட்டம், க்ரிஷ் ஒப்பந்தம், ஹெட்ஜிங் ஒப்பந்தம், அவன்கார்ட் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பிலும் மற்றும் பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, மகிந்தானந்த அளுத்கமகே, அஜித் நிவாட் கப்ரால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பலர் சம்பந்தப்பட்ட ஆவணங்களே இவ்வாறு வெளியிடப்பட்டன.இதில் அப்போது தேசிய மக்கள் சக்தி -ஜே .வி.பி.தரப்பினரால் குறிப்பிடப்பட்டிருந்ததாவது,
பஸிலின் சொத்துக்கள்
திருநடேசனின் பெயரிலேயெ பஸில் ராஜபக்ஷவின் அதிகமான சொத்துக்கள் இருந்துள்ளன. இது தொடர்பில் நாங்கள் தொடர்ச்சியாக வெளிக்கொண்டுவந்துள்ளோம். இதில் பிரபல கொடுக்கல் வாங்கலொன்று இடம்பெற்றுள்ளது. அது 4100 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தது. சைனா நெஷனல் மேச்சரிங் என்ற நிறுவனமே அதற்கான நிதியை வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தினால் மற்றுமொரு நிறுவனத்திற்கு பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தடவையும் 5 மில்லியன் டொலர் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனமானது திருநடேசனுடையதே. இதற்கான வங்கிக் கணக்கின் ஊடாக மல்வானையில் உள்ள காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷவின் காணிகள்
யோஷித ராஜபக்ஷவின் பெயரில் ஸ்ரீ போபுர வனப் பகுதியில் காணிகள் உள்ளன, பத்தரமுல்லையில் சீஎஸ்என் அலைவரிசை இருந்த கட்டிடம், கால்டன் ஸ்போர்ட் நெட்வேர்க் நிறுவனத்திற்கான காணி உள்ளிட்ட 31 இடங்களில் யோஷித ராஜபக்ஷவின் பெயரில் காணிகள் உள்ளன. இதில் பத்தரமுல்லையில் கால்டன் நெட்வேட்க் காணி தொடர்பில் எடுத்தால், நகர அபிவிருத்தி அதிகார சபையின் இடமே அது. அது ராஜபக்ஷ நிதியத்திற்கே வழங்கியுள்ளனர். புண்ணிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட காணி இறுதியில் கால்டன் தொலைகாட்சி நிறுவனத்தின் காணியாக மாற்றப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 200 மில்லியன் ரூபாவாகும்.அதேபோன்று சீஎஸ்என் அலைவரிசையை ஆரம்பிக்க எங்கிருந்து பணம் கிடைத்தது எவ்வாறு கிடைத்தது என்ற தகவல்கள் அறிக்கையில் உள்ளன. இதன்படி பணச் சலவை சட்டத்தின் கீழ் வழக்குகளை தொடர முடியும்.
எயார்பஸ் கொள்வனவு மோசடி
இதேவேளை பிரான்ஸின் எயார் பஸ் நிறுவனம் ஒன்றில் இருந்து எயார் பஸ்களை கொள்வனவு செய்வதற்காக பத்தரமுல்லையிலுள்ள சமல் ராஜபக்ஷவின் இல்லத்தில் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. இந்த கொள்வனவின் மொத்தப் பெருமதி 2.2 பில்லியன் டொலர்களாகும். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற பெரிய கொள்வனவே இது. அத்துடன் நீண்ட கால குத்தகை அடிப்படையில் 4 விமானங்களை கொள்வனவு செய்ய தலா 3 இலட்சம் டொலர் தரகுப் பணம் செலுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது. ஆனால் ஆட்சிக் கவிழ்ந்த பின்னர் 2 மில்லியன் டொலர் வைப்புத் தொகையை மீள வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை அப்போதைய எயர்லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியின் மனைவியின் கணக்கில் வைப்பில் இடப்பட்டுள்ளது. அந்தப் பணம் அவுஸ்திரேலியாவில் உள்ள வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து இலங்கைகயிலுள்ள மூன்று வங்கிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.நல்லாட்சியின் போது இந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய 115 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்படவில்லை.
அஜித் நிவாட் கப்ரால் தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்காவின் சீஐஏவை சேர்ந்த சுபேரு என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் 12.5 மில்லியன் டொலர்களை எப்படி சம்பாதித்தார் என்பதனை காட்ட முடியாமையினால் கைது செய்யப்பட்டார். அவர் 12 வருடங்களுக்கு சிறையில் இருக்கின்றார். இந்நிலையில் அவரின் கணக்குகளை பரிசோதிக்கும் போது, இலங்கையின் மத்திய வங்கி ஆளுநராக இருக்கும் போது அஜித் நிவாட் கப்ரால், இலங்கையின் பெயரை உயர்த்துவதற்காக 6.5 மில்லியன் டொலர் அவருக்கு செலுத்தியுள்ளார்.இது சரியென்றால் கப்ராலும் சிறைக்கு போக வேண்டும்.
ஊழல் மோசடியில் சிக்கிய ஊழல் விசாரணை ஆணைக்குழுத் தலைவர்
ஊழல் மோசடிகள் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் பாலபட்டபெந்தி, வாகனமொன்றை விடுவிப்பதற்காக அவர் ஒருவாகனத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு எதிராகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றது.
காணாமல் போனது தங்க சிலையா? தங்க முலாம் பூசப்பட்ட சிலையா?
கடற்படையினரால் கிழக்கு கடற்பரப்பில் 45 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதற்கு 24 மணித்தியாலங்களுக்குள் கடற்படை தளபதியினால் சந்தஹிருசாய தூபிக்காக கைப்பற்றப்பட்ட தங்கத்தில் 8 கிலோ தங்கத்தை வழங்குமாறு சுங்கத்திடம் கேட்டுள்ளார். ஆனால் கைப்பற்றப்பட்டு ஒரு மாதம் வரையில் அதனை வழங்க முடியாது என்று சுங்கம் பதிலளித்துள்ளது. ஆனால் அரசுடமையாக்கப்பட்ட பழைய தங்கத்தில் 8 கிலோவை கொடுத்துள்ளனர்.அதன் பின்னர் இலங்கை வங்கியிலும் 3 கிலோ தங்கத்தை பெற்றுக்கொள்கின்றனர். எல்லாமாக 11 கிலோ தங்கத்தை பெற்றுள்ளனர். இவற்றை கொண்டு வெலிசர முகாமில் ஒரு அடிஉயரத்தில் தங்கத்தில் புத்தர் சிலை அமைக்கப்படுகின்றது. அதேபோன்று அச்சில் பித்தளையிலும் இரண்டு சிலைகளை உருவாக்கினர். அதற்கு மேலதிகமாக ஒன்று, இரண்டு அடி உயரத்தில் புத்தர் சிலைகள் அமைக்கப்படுகின்றன. அதில் ஒரு அடி உயரத்தில் உள்ள சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்படுகின்றது.
பின்னர் அனுராதபுரத்தில் அந்தப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு ஒரு அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் தங்க சிலை பிரதிஸ்டை செய்யப்படும் என்று கூறப்பட்டன. பின்னர் தங்க முலாம் பூசப்பட்ட சிலை காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அப்படியாயின் காணமல் போனது தங்க சிலையா? தங்க முலாம் பூசப்பட்ட சிலையா? அங்கு பிரதிஸ்டை செய்யப்பட்ட சிலை எது? இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் உள்ளன. இதில் உள்ளே என்ன உள்ளது என்ற சந்தேகங்கள் உள்ளன
அவன்கார்ட் கொடுக்கல் வாங்கல்
கடற்படையினர் இந்த அவன்கார்ட் கொடுக்கல் வாங்கல் வியாபாராத்தை ஆரம்பித்தனர். இதில் வருமானத்தில் 25 வீதத்தை அரசாங்கத்திற்கு வழங்கவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்போது ஆரம்பத்தில் இருந்த கடற்படை தளபதி அதனை 23 வீதமாக குறைப்பதுடன், தான் ஓய்வு பெற்ற பின்னர் அவன்கார்ட் நிறுவனத்திற்கு செல்கின்றார். அதற்கு பின்னர் வந்த கடற்படைத் தளபதியும் அதனை மீண்டும் குறைக்கின்றார். அவரும் இறுதியில் அந்த நிறுவனத்திற்கே செல்கின்றார். அடுத்தவர் 17 வீதமான குறைத்து அவரும் அவன்கார்ட்டுக்கு போகின்றார்.கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படைத் தளபதிகள் நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளனர். அன்றைய தினமே மைத்திரிபால சிறிசேன இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் டில்ருக்ஷி டயசை பதவி விலகுமாறு கூறியுள்ளார். இவர்கள் ஊழல் மோசடிக் காரர்களை பாதுகாத்துக்கொண்டுள்ளனர்.
கொள்வனவு – நிர்மாண மோசடிகள்
நிதி மறுசீரமைப்பு முறைமையில் 2011 ஆம் ஆண்டில் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன்படி விருப்ப அடிப்படையில் வேலைத்திட்டங்கள் தொடர்பான யோசனைகளுக்கு அனுமதிக்க முடியுமென்ற தீர்மானத்தை எடுத்தனர். மனுக்கோரலுக்கும் அப்பால் இவை நடக்கும். இதன்படி 2011 ஆம் ஆண்டின் பின்னர் விருப்ப அடிப்படையில் நடைபெற்ற வேலைத்திட்டங்களே அதிகமாக உள்ளன. 298 யோசனைகளில் 62 யோசனைகள் கடந்த காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு கிழக்கு ரயில் பாதை மறுசீரமைப்பு நடவடிக்கை, மாத்தறை – பெலியத்தை பகுதி நிர்மாணம், பசுமாடுகள் இறக்குமதி, புத்தளம் நிலக்கரி மின் உற்பத்தி நிலைய நிர்மாணம் உள்ளிட்ட விடயங்களை கூறலாம்.இவற்றின் பெறுமதி 7918 மில்லியன் டொலர், 455 மில்லியன் யூரோவும், 45 மில்லியன் பவுன்ஸ் ஆகும். கணக்காய்வு திணைக்களத்தினால் கட்டுநாயக்க அதிவேக வீதி தொடர்பில் ஆய்வு செய்துள்ளது. திட்டமிட்டதிலும் பார்க்க 437 வீதத்தால் அது அதிகரித்துள்ளது. இப்படிதான் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளது.
மகிந்தானந்தவின் சொத்துக்கள்
தனிப்பட்ட குடும்ப வழக்கொன்றில் மகிந்தானந்த அளுத்கமகேவின் சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன . அதில் சிங்கப்பூரில் உள்ள கணக்கில் 5 இலட்சம் வரையிலான டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ளன. எப்படி இந்த டொலரை சம்பாதித்தார்?. கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள வர்த்தக நிலையம் எப்படி இவருக்கு சொந்தமாகியது என்று தேடிப்பார்க்க வேண்டும். நாவல, நாவலப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள காணிகள் தொடர்பிலும் சந்தேகங்கள் உள்ளன.
சஜித் மீதான குற்றச்சாட்டு
கலாசார நிதியத்தின் விசாரணை அறிக்கை பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 பில்லியன் ரூபா அனுமதியின்றி செலவிடப்பட்டுள்ளது. கலாசார நிதியத்தின் தலைவராக பிரதமரே இருக்கின்றார். அப்போது ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக இருந்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு அண்மித்த தினத்தில் அவசரமாக பணிப்பாளர் குழுவை கூட்டி பழைய செலவுகளுக்கு அனுமதி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பிரதமர், அதில் இருந்த அமில தேரர் ஆகியோரும் கையெழுத்திடவில்லை.இந்நிலையில் எவ்வித முறையான நிதி விடுவிப்பும் இன்றி 3 பில்லியன் ரூபா அப்போதிருந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரான சஜித் பிரேமதாசவினால் கலாசார நிதியத்தில் இருந்து செலவிடப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன.இதேவேளை பிணைமுறி விடயத்தில் பலரிடம் பணப் பறிமாற்றங்கள் நடந்துள்ளன. அதில் மைத்திரியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சஜித் பிரேமதாசவின் பெயரும் உள்ளது.
கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் விசேட ஊடக சந்திப்பை நடத்தி இவ்வாறு 500க்கும் மேற்பட்ட அந்த ஆவணங்களை வெளியிட்டது வேறு யாருமல்ல தேசிய மக்கள் சக்தி- ஜே.வி.பி தலைவரான அநுரகுமார திசாநாயக்கதான். ஆனால் இன்று அவர் ஜனாதிபதியாகியுள்ளபோதும் இந்தக் குற்றச்சாட்டுக்களில் பெரும்பாலானவற்றை தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. இதில் சம்பந்தப்பட்ட சிலர் வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டும் விசாரணைக்குட்படுத்தப்பட்டும் சிறைவைக்கப்பட்டுமுள்ளனரே தவிர இந்த முக்கிய, பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதுவித சட்ட நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை. தாக்கல் செய்யப்பட்ட சில வழக்குகளிலிருந்தும் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் இவற்றை விசாரணை செய்யப்போனால் முடிவின்றி விசாரணைகளை தொடர வேண்டியேற்படும், முக்கியதலைவர்கள், பிரபலங்களை கைது செய்யவேண்டியேற்படும். இதனால் தமது ஆட்சிக்கும் ஆபத்து ஏற்படும் என்பதனால் அநுரகுமார அரசாங்கமும் அடக்கியே வாசிக்கின்றது.
அப்படி இல்லை என்று மறுப்பார்களேயானால் அன்று குற்றம்சாட்டியவையெல்லாம் அரசியலுக்கான பொய்களாக இருக்க வேண்டும் அல்லது இன்று அவர்கள் செய்வது மக்களை ஏமாற்றும் அரசியலாக இருக்க வேண்டும் .