“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளாரின் வழித்தோன்றல்கள் நாங்கள் முல்லைக் கொடிக்குத் தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்த பாரியின் பரம்பரையினர் நாங்கள். ஆனால், இன்று அந்த ஈவிரக்கம் எங்களிடம் இல்லை.
தன் நெருங்கிய குடும்பத்தவர்களையே ஒருவர் கொலை செய்யும் அளவுக்குப் பலரது மனது பாலையாகக் காய்ந்துபோய்க் கிடக்கிறது. இயற்கையை நண்பனாக நேசித்த நாம் இன்று இயற்கை வளங்களை அளவு கணக்கின்றிச் சூறையாடத் தலைப்பட்டுள்ளோம். இயற்கை மீதான இந்த வன்முறையே சக மனிதர்கள் மீதான வன்முறையாகவும், கொலை வெறியாகவும் வெடிக்கிறது என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கடந்த அண்மையில் நடைபெற்ற க.பொ.த உயர்தரம் 2028 பிரிவு மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தும் கருத்தமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இயற்கையை நேசிப்பவர்களாலேயே சக மனிதர்களையும் நேசிக்க முடியும். இது ஒரு வெறும் வாக்கியம் அல்ல, இது ஒரு வாழ்க்கை முறை. இயற்கை என்பது எமக்குப் புறம்பான, எமக்கு வெளியே இருக்கும் ஒன்று அல்ல. நாம் தான் இயற்கை. நாம் இயற்கையின் ஒரு பகுதி. ஒரு மரத்தைத்தறிக்கும் போது நம் நுரையீரலின் ஒரு பகுதியை நாமே சிதைக்கிறோம். இதை எப்போது உணர்கிறோமோ அப்போதுதான் உண்மையான அன்பு ஊற்றெடுக்கும். இது தாவரங்களையும், பிராணிகளையும் மாத்திரம் அல்ல; சகமனிதர்கள் மீதான நேசிப்பாகவும் பரிணமிக்கும்.
இயற்கையில் புழு, பூச்சி முதல் யானை வரைக்கும், அறுகம்புல் முதல் ஆலமரம் வரைக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. சங்கிலித் தொடர்போல ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும். இவற்றில் ஏதாவது ஒன்று அழியமானால் ஒட்டுமொத்தச் சூழலுமே பாதிக்கப்படும். இயற்கையின் இந்தப் பல்லினத்துவம் மனிதர்களிடத்தில் சமத்துவத்தைக் கற்றுத் தருகிறது. சாதி, மத, இனப் பேதங்கள் கடந்து சகல மனிதர்களையும் நேசிக்கக் கற்றுத்தருகிறது. இயற்கையை நேசிக்கும் ஒருவரே சக மனிதர்களையும் நேசிப்பவர் ஆகிறார்.
மனிதர்களில் இப்போதும் ஆதிமனிதனின் வேட்டைக் குணாம்சம் உறைந்துதான் இருக்கிறது. அந்த வேட்டைக்குணம் தலைதூக்குபவர்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் தமதாக்கத் துடிக்கிறார்கள், உலகின் அத்தனை வளங்களையும் ஆக்கிரமிக்கும் பொருட்டுப் போர்களையும் ஏற்படுத்துகிறார்கள். மத்திய கிழக்கில் இன்று நடைபெறும் போர் இயற்கை வளங்கள் மீதான அமெரிக்காவின் வன்முறைதான். இதுவே மனிதாபிமானம் கடந்து கொலைவெறியாகவும் தாண்டவமாடுகிறது.
எனவே, மனித வாழ்வைப் பக்குவப்படுத்தும் பண்பாட்டு நெறிமுறையாக இயற்கையை நாம் நேசிக்கத் தொடங்குவோம் என்றும் தெரிவித்தார்