இலங்கைப் போர் காரணமாக ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக வாழும் இலங்கையர்கள், தாயகம் திரும்ப அமைச்சரவை ஒப்புதல்.

Share

போரின் காரணமாக முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று அகதிகளாக வாழும் இலங்கையர்கள், மீண்டும் தாயகம் திரும்புவதற்குத் தேவையான குடிவரவு தடையகற்றல் வசதிகளை வழங்குவதற்கு இலங்கை அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே 11ம் திகதி திங்கட்கிழமை அன்று அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது.

யுத்த காலத்தில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக, அங்கீகரிக்கப்பட்ட துறைமுகங்கள் மூலமன்றியும் முறையான கடவுச்சீட்டுகள் இன்றியும் இந்தியாவுக்குச் சென்ற பலர் அங்கு அகதிகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் (UNHCR) ஊடாகத் தன்னார்வமாக மீண்டும் தாயகம் திரும்ப எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதனடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைகளுக்கு அமையப் பின்வரும் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் முறையான ஆவணங்களின்றி இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் இலங்கையர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்களுக்கு, அரசு உளவுத்துறையின் தடையகற்றல் அறிக்கை பெறப்படும்.

இவர்கள் கொலை, தேசத்துரோகம் போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்.

தொடர்புடைய நபர்களுக்குத் தற்காலிகப் பயண ஆவணங்கள் வழங்கப்பட்டு, 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தின் கீழ் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அங்கீகரிக்கப்பட்ட வழிகள் ஊடாக நாட்டிற்குள் நுழைவதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் யுத்தம் நிறைவடைந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கும், அடையாளப் படுத்தல் மற்றும் உளவுத்துறை தடையகற்றல் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகளின்றி நாட்டிற்குள் நுழையச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அதேவேளை, கொலை மற்றும் தேசத்துரோகம் உள்ளிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்கள் துறைமுகம் அல்லது வானூர்தி நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமிழகத்தில் தங்கியுள்ள பலர் தாயகம. திரும்ப முன் வருவர் என எதிர்பார்க்கபடுகின்றது. இதேநேரம் தாயகம் திரும்ப விரும்பும் தம்மை விமானங்கள் ஊடாக அன்றி தனியான கப்பலில் எடைகளின் வரையறையின்றி அனுப்பி வைக்க வேண்டும் என முன் வைக்கப்படும் கோரிக்கை தொடர்பில் இந்த தீர்மானத்தின்போது பிரஸ்தாபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>