– அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
இலங்கையின் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி ஈரானியக் கப்பல்கள் நுழைந்துள்ளன என்று கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை அரசுக்கு உத்தியோகபூர்வ அறிக்கைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரச தகவல் திணைக்களத்தில் 31ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தை அண்மித்து ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், இக்கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்துள்ளமை குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை. இது குறித்து வெளிவிவகார அமைச்சிடம் விசாரித்து உண்மைத் தன்மை வெளியிடப்படும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடுமையான போர்ப் பதற்றங்கள் நிலவினாலும், இலங்கை எப்போதுமே தனது நடுநிலைமையான இராஜதந்திர நிலைப்பாட்டையே பேணி வருகின்றது. உலக நாடுகள் பிளவுபட்டு நிற்கும் வேளையிலும் எந்தவொரு பக்கமும் சாராமல், மனிதநேய அடிப்படையில் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் மட்டுமே இலங்கை செயற்பட்டு வருகின்றது.” – என்றார்.
இதனிடையே, இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்துக்கு அருகில் நங்கூரமிட்டுள்ளன என்று கூறப்படும் கப்பல்கள் குறித்து அரசு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் கப்பல்கள் இலங்கையின் இறையாண்மை எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ளமையால் அவற்றுக்கு அரசு பொறுப்பேற்காது என்றும், அந்தக் கப்பல்களுக்கு எவ்வித வசதிகளோ சேவைகளோ வழங்கப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.