ஈரானுக்கு எதிராக போரிட்டு வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள், நாளுக்கு நாள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் அந்த நாட் டின் நீர்மூழ்கி கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க ராணுவ மந்திரி ஹெக்சேத் கூறியுள்ளார். இதனிடையே வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் இன்று 21-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான் இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகள் மீதும் ஆவேச பதிலடியை கொடுத்து வருகிறது.
சர்வதேச சமூகத்தை உலுக்கி வரும் இந்த போர். தற்போது அடுத்த கட்டத்தை எட்டி இருக்கிறது. அதாவது இரு தரப்பும் எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனங்களை குறிவைத்து தாக்க தொடங்கி உள்ளன. இந்நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகம் (பெண்டகன்) ஈரான் போருக்கு கூடுதலாக 200 பில்லியன் டாலர் (ரூ.18 லட்சம் கோடி) நிதி தேவை என கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி பீட் ஹெக்சேத் கூறுகையில், “இந்த தொகையில் மாற்றம் ஏற்படலாம். ராணுவத்துக்கு தேவையான நிதியை உறுதி செய்ய நாடாளுமன்றத்தை அணுக உள்ளோம். மோசமான நபர்களை கொல்ல ராணுவத்துக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது” என்று கூறினார். இது மிகவும் அதிகமான தொகை என்பதால், இந்த புதிய செலவின கோரிக்கைக்கு காங்கிரஸின் ஒப்புதல் தேவைப்படும், மேலும் இத்தகைய செலவினங்களுக்கு அரசியல் ஆதரவு இருக்குமா என்பதும் தெளிவாக தெரியவில்லை. நாட்டின் கடன் சாதனை அளவான 39 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பெண்டகனில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ மந்திரி ஹெக்சேத் பேசும்போது, ‘ஈரானின் கடற்படை இனி ஒரு காரணியாக இருக்காது. அவர்களது நீர்மூழ்கி கப்பல்களை பொறுத்தவரை, ஒரு காலத்தில் அவர்களிடம் இருந்த 11 நீர்மூழ்கி கப்பல்களும் தற்போது அழிக்கப்பட்டு விட்டன’ என தெரிவித்திருந்தார்.