அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் பலர் உயிரிழந்தனர். மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
அதேவேளை, பல கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்துவதாக ஏப்ரல் 7ம் தேதி அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து, அமெரிக்கா , ஈரான் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அணு ஆயுத தயாரிப்பு முயற்சியை ஈரான் கைவிட வேண்டும், கைவசமுள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை ஈரானிடம் அமெரிக்கா முன்வைத்துள்ளது. அதேவேளை, ஈரான் துறைமுகங்களை முடக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். ஹர்முஸ் ஜலசந்தி பகுதி ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதை அங்கீகரிக்க வேண்டும். மத்திய கிழக்கில் ஈரானுக்கு அருகே அமைந்துள்ள நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப்பெறப்பட வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகளை அமெரிக்காவிடம் ஈரான் முன்வைத்துள்ளது. அதேவேளை, தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் அமெரிக்காவும், ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஈரான் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் பண்டர் அபாஸ் நகர் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் ஈரான் கடற்படைக்கு படகுகள் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. தற்காப்புக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அதேவேளை, இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.