உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் வெங்கிட சுப்பிரமணி மோகனா அவருக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக, இந்திய தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான கொலீஜியம் ஆலோசனை மேற்கொண்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 22 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடந்தது. இந்த ஆலோசனையின் முடிவில், உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் 4 பேர் மற்றும் மூத்த வழக்கறிஞர் வி. மோகனா ஆகியோரை பதவி உயர்த்துவதற்கு உச்சநீதிமன்றம் கொலீஜியம் பரிந்துரை செய்தது. இவர்களில் வழக்கறிஞர் மோகனா தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் ஆவார். அவருடைய நியமனத்திற்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், உச்சநீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். உச்சநீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராக பணியாற்றி நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும், தமிழ்நாட்டை சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் உந்துசக்தியாக திகழும். உச்சநீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் அவருக்கு என் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.