கனடாவில் நாற்பது வருடங்களாக இயங்கிவரும் ஒன்றாரியோ முது தமிழர் மன்றம்( STC ) கடந்த வெள்ளிக்கிழமை மே மாதம் 22ம் திகதி நடத்திய மூத்தோர்களுக்கான பேச்சுப் போட்டி சபையோரைக் கவர்ந்தது என்றே குறிப்பிட வேண்டும்.
‘முதுமை ஒரு வரமா அல்லது சாபமா? என்ற தலைப்பில் நடத்தப்பெற்ற இந்த பேச்சுப் போட்டியில் மன்றத்தின் அங்கத்தவர்களான 8 மூத்தோர்கள் பங்கு பற்றினர். அவர்கள் அனைவரும் தங்கள் பேச்சை திறம்பட தயாரித்து ஆயத்தமாக வந்து கலந்து கொண்டார்கள்.
சபையில் சுமார் 300 ஒன்றாரியோ முது தமிழர் மன்ற( STC ) அங்கத்தவர்கள் உற்சாகத்துடன் அமர்ந்திருந்து போட்டியாளர்களின் உரைகளை அவதானத்துடன் செவிமடுத்தும் கரகோசங்கள் செய்தும் உற்சாகப்படுத்தினர்.
மன்றத்தின் நிர்வாக உத்தியோகத்தரான திருமதி வசந்தி போட்டி பற்றிய நிபந்தனைகளை வாசித்து நடுவர்களை சபைக்கு அழைத்தார்.
பேச்சுப் போட்டியின் நடுவர்களாக எழுத்தாளர் குரும்பசிட்டி ஜெகதீசன். டாக்டர் கதிர் துரைசிங்கம் மற்றும் ‘கனடா உதயன்’ லோகேந்திரலிங்கம் ( மலையன்பன் ) ஆகியோர் பணியாற்றியதுடன் நிதானத்துடனும் ஒத்த முடிவுகளுடன் இரண்டு வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களில் முதலாவது இடத்தை திருமதி ரதினி செபஸ்ரியன் மற்றும் இரண்டாம் இடத்தை சாந்தகுமாரி நிரோசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.