காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 60 பேர் உயிரிழப்பு

Share

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது.

நேற்று ஹமாஸ் அமைப்பினர் தங்கள் வசம் இருந்த பணய கைதியான இஸ்ரேல் வாழ் அமெரிக்கர் இடன் அலெக்சாண்டர் என்பவரை விடுதலை செய்தனர். அதே சமயம், இந்த போரை நிறுத்துவதற்கான வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில், வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்ததாக காசாவில் உள்ள மருத்துவமனைகள் தகவல் தெரிவித்துள்ளன. காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 52,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>