சாவகச்சேரி நகராட்சி மன்றின் உள்ளூராட்சி வார நடமாடும் சேவையின் போது கண்டுபிடிக்கப்பட்டு உபதவிசாளர் கிஷோரின் முயற்சியால் அதிரடியாக உடனடியாகவே தூர்வாரப்பட்ட குஞ்சர்துரவு குளம் இப்போது நீர் நிரம்பிக் காணப்படுகின்றது.
நகராட்சி மன்றின் எல்லைக்குட்பட்ட மீசாலை கிழக்கு வட்டரத்தின் குஞ்சர் துரவு வீதி குறித்த குளம் அமைந்துள்ள காரணத்தினாலேயே குஞ்சர் துரவு வீதி என அழைக்கப்படுகின்றது.
ஆனால் குறித்த வீதியில் குளம் அமைந்துள்ளதற்கான எந்தவிதமான அடையாளமும் காணப்படவில்லை.
குறித்த குளம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் வட்டார உறுப்பினர் பிரகாஸிடம் முறையிட்டுள்ளனர். உடனே இவ்விடயம் தொடர்பாக உபதவிசாளர் கிஷோருக்கு தெரிவித்ததையடுத்து நகராட்சி மன்ற தவிசாளர் ஶ்ரீபிரகாஸின் அனுமதியோடு நடமாடும் சேவையின் பொழுது குறித்த குளம் அடையாளம் காணப்பட்டு நகராட்சி மன்றத்தினரால் அதிரடியாக ஒரே நாளில் தூர்வாரப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெய்கின்ற பருவ மழையினால் குறித்த குளம் அதிகளவு நீர் நிரம்பி காணப்படுவது அக்கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி மன்றினதும் உபதவிசாளரினதும் அதிரடியான இச்செயற்பாட்டினை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றார்.