சிறைகளில் உயிரிழந்த அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று வர வேண்டும்.

Share

சிறைகளில் சாவினைத்தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல் குறித்து குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு இன்றையதினம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கையும் காரணங்களும் காலத்திற்கு காலம் வேறுபடுகிறது.

அவசரகாலச்சட்டம் மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்றவற்றின் கீழ் சந்தேகத்தின் பெயரில் பால், வயது வேறுபாடின்றி கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள், இனத்தின் பெயரில் வஞ்சிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டவர்களாவர்.

இவ்வாறு சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் நூற்றுக்கணக்கானவர்கள் திட்டமிடப்பட்ட சிறைக்கலவரங்களாலும் நோய்வாய்ப்பட்ட நிலையில் போதிய மருத்துவ பராமரிப்பின்றியும் சிறையின் பரிதாபகரமாக நான்கு சுவர்களுக்குள்ளேயே நீதியின்றி கொல்லப்பட்டுள்ளார்கள்.

1983 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட ஜூலைக் கலவரத்தின்போது, வெலிக்கடை சிறையின் அதியுயர் பாதுகாப்புப் பிரிவுக்குள் தடுத்துவைக்கப்பட்டிருந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட்ட 54 தமிழ் அரசியல் கைதிகள் அரசின் கைக்கூலிகளால் சிறைக் கொட்டடிகளுக்குள்ளேயே கதறக் கதற கொன்றொழிக்கப்பட்டார்கள்.

1987 இல் அதேபோன்று பூசா தடுப்புமுகாமில் 9 தமிழ் அரசியல் கைதிகளும், களுத்துறை சிறையில் 5 தமிழ் அரசியல் கைதிகளும் கொடூரமாக சாகடிக்கப்பட்டார்கள். 2001 ஆம் ஆண்டில் காடையர்கள் நடாத்திய பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாம்மீது இனவெறிகொண்ட மிருகத்தனமான தாக்குதலில் 27 தமிழ் அரசியல் கைதிகள் வெட்டியும் குத்தியும் செய்யப்பட்டுள்ளார்கள். 2012 இல் வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் சிறையதிகாரிகளாலும் விசேட அதிரடிப்படையினராலும் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவைமட்டுமல்ல, யுத்த காலங்களில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் நீண்டநெடுங்காலமாக கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் பலர் உடல் உள தாக்கங்களாலும் போதிய மருத்துவம் மற்றும் போசாக்கான உணவின்மையாலும் நோய் நொடிகளுக்கு ஆளாகி சிறைக்குள் சாவடையும் பெருந்துயரம் அண்மைக்காலம்வரை இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது .

இவ்வாறு நீண்டுசெல்கின்ற சிறைக்கொடுமைகளின் பட்டியலில், அங்க இழப்புகளுடனும் விழுப்புன்களுடனும் தப்பி பிழைத்து, இப்பூமிப் பந்தின் எங்கோர் மூலையில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எவ்வாறாயினும், ஒரு இனச்சமூகத்தின் பெயரில் சிறையிலடைக்கப்பட்டு வஞ்சகமாக கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நினைவுகூரப்பட்டு தமிழர் எம் வரலாற்று ஆவணங்களில் இவர்களது சம்பவங்களும் சாவுகளும் சான்றாதாரங்களாக பொறிக்கப்படவேண்டும்.

அந்தவகையில் , “குரலற்றவர்களின் குரல்” அமைப்பானது ஆண்டுதோறும் வருகின்ற ஜுலை 25 ஆம் திகதியை “உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்” என பிரகடனம் செய்து அதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது.

அத்துடன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு உயிர்நீத்த அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி காணப்படுகிறது. இதனை தீர்ப்பதற்கு எம் நாட்டில் வசிக்கும் உறவுகளும் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் உறவுகளும் பொருளாதார ரீதியாக உதவி செய்வதற்கு முன்வரவேண்டும்.

இதற்காக நாங்களே நேரடியாக களத்தில் இறங்கி ஆராய்ந்து அந்த குடும்பங்களுடன் தங்களை இணைத்து விடுவோம், தாங்கள் அந்த குடும்பங்களுக்கு நேரடியாகவே உதவிகளை வழங்க முடியும் – என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>