மீனவ மக்களை திரட்டி போராட தயங்க மாட்டோம் என்கிறார் அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பிராஜா !
பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் கடல் அட்ட பண்ணையை யாழில் விரிவுபடுத்தப் போவதாக அறிவித்துள்ள கடற் தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு எதிராக மீனவ மக்களை ஒன்று திரட்டி போராட தயங்க மாட்டோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராஜா தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் 10ம் திகதி புதன்கிழமையன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மக்களின் போனஸ் ஆசனத்தில் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகரன் மீது மீனவ மக்கள் நம்பிக்கை வைத்தனர்.
ஏனெனில் கடந்த காலங்களில் கடற் தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா கடல் அட்டை பண்ணைகளை விரிவுபடுத்தியபோது அதற்கு எதிராக மீனவ மக்களுடன் இணைந்து குரல் கொடுத்தவர் தற்போதைய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் .
ஆனால் தற்போது அமைச்சராகிய நிலையில் எல்லாவற்றையும் மறந்து சீனாவின் பிரதிநிதியாக சீன நாட்டின் விருப்பங்களை தமிழர் பகுதிகளில் நிறைவேற்றுபவராக மாறத் தொடங்கியுள்ளார் அமைச்சர் சந்திரசேகரன்.
அவர் ஒரு காணொளியில் கூறுகிறார் “அட்டைப் பண்ணை எல்லாருக்கும் தருகிறோம் கவலைப்படாதீங்க” என்று. அதன் பிறகு கூறுகிறார் நீங்கள் ஒன்றரை ஏக்கரை பிடியுங்கள் அரை ஏக்கருக்கு காசு கட்டினால் போதும் என்கிறார். இது ஊழலை ஊக்குவிக்கின்ற ஒரு செயற்பாடாகவே பார்க்கிறேன்.
கடந்த காலங்களில் ட க்ளாஸ் தேவானந்தா மீனவர்களின் விருப்பங்களுக்கு மாறாக அட்டைப் பண்ணையை ஊக்குவித்ததால் இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்து இருக்கிறார்.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கு நாம் ஒன்றை கூறுகிறோம், மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சீனாவின் நிகழ்ச்சி நிரல் நீங்கள் செயற்படுவீர்கள் ஆனால் உங்களுக்கு எதிராக மீனவ மக்களை ஒன்று திரட்டி போராட தயங்க மாட்டோம் என அவர் மேலும் தெரிவித்தார்.