சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யூ நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு 7.29 மணியளவில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், முழுமையான மீட்புப்பணிகளை மேற்கொள்ளவும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், பணியிட பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, பெரிய விபத்துகளைத் தடுக்க ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், சீன துணைப் பிரதமர் ஜாங் குவோசிங் தலைமையிலான குழு சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப்பணிகளை கண்காணித்து வருகிறது.