அமெரிக்கா – ஈரான் மோதலால் உலக அளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது. உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கான கடல்வழி பாதையையான ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதன் தாக்கம் உலக அளவில் எதிரொலித்து வருகிறது. ஈரானுக்கு முக்கிய பொருளாதார ஆதரவாளராக சீனா செயல்பட்டு வருகிறது. அதேவேளை, அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக வர்த்தக ரீதியில் மோதல் நீடித்து வருகிறது.
இதனிடையே, 3 நாட்கள் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 13ம் தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். சீனா சென்ற டொனால்டு டிரம்ப் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர்களும் சீனா சென்றிருந்தனர். சீன தொழிலதிபர்களை அமெரிக்க தொழிலதிபர்கள் சந்தித்தனர். இந்த பயணத்தின்போது சீனா, அமெரிக்கா இடையே பல்வேறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில், 3 நாட்கள் சீன பயணத்தை நிறைவு செய்த டொனால்டு டிரம்ப் அமெரிக்கா சென்றடைந்தார். தனி விமானம் மூலம் சீனாவில் இருந்து புறப்பட்ட டிரம்ப் அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணம் சென்றடைந்தார். மேலும், சீன அதிபருடனான சந்திப்பு சிறப்பாக அமைந்ததாக டிரம்ப் கூறினார்.