தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக மாற்றப்பட வேண்டும் என்கிறது யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம்

Share

பு.கஜிந்தன்

அரசியல் கைதிகளின் பிரச்சினையானது சர்வதேச பிரச்சினையாக மாற்றப்பட வேண்டும் – யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் வலியுறுத்து!

கிளீன் ஸ்ரீலங்கா என்பது தனியே, சுத்தம், சுகாதாரத்தை முன்னிறுத்தி வீதிகளை தூய்மைப்படுத்தல் என்பவற்றுடன் இந்த அரசின் நோக்கங்கள் இலக்குகள் அமைந்து விடக்கூடாது. அது மக்கள் மனங்களில் இருக்கக்கூடிய ஆறாத வடுக்களை, மக்கள் மனங்களில் இருக்கக்கூடிய ரணங்களை எப்போதும் தணிப்பதாக இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் சி.சிவகஜன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து வேட்டையின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்காவின் அரச படைகளினால் இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு, அல்லது அதற்குப் பின்னரான காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி போராளிகள் நலன்புரிச் சங்கத்தினர் முன்னெடுத்து வரும் கையெழுத்து வேட்டைக்கு வலுச் சேர்க்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தமது ஆதரவை வழங்கியுள்ளது.

2017ஆம் ஆண்டு காலப்பகுதியில் 162ஆக இருந்த தமிழ் அரசியல் கைதிகளில், தற்போது 10 பேர் தொடர்ந்தும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களில் எட்டு பேர் மீது இலங்கை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இருவர் இதுவரை வழக்கு விசாரணைகள் இல்லாமல் தொடர்ந்தும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

கிளீன் ஸ்ரீலங்கா என்ற வேலைத்திட்டத்தை இந்த அரசு நாட்டில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த அரசின் கரங்களானது, ஒரு இனத்தின் கரங்களில் வலிந்து திணித்த போரின் காரணமாக ஏற்பட்ட இரத்தக்கறை படிந்து காணப்படுகின்றது. அதனை அந்த அரசு சுத்தம் செய்வதற்கு முன் வரவேண்டும் என மாணவர்களாக நாம் வேண்டி நிற்கின்றோம்.

இனப்படுகொலை போர் குற்றத்திற்கு இந்த அரசு பொறுப்புக் கூற வேண்டும். இந்த இனப்படுகொலை போருடன் தொடர்புபட்டவர்கள் தான் இந்த அரசியல் கைதிகள். அவர்களை வெறுமனே அரசியல் கைதிகள் என்று அழைப்பதற்கு பதிலாக, சர்வதேச பன்னாட்டு சமவாயங்களுக்கு அடிப்படையிலே அவர்களை நாங்கள் போர் கைதிகள் என்று தான் அழைக்க வேண்டும்.

எம்மீது வலிந்து திணிக்கப்பட்ட இந்த போர் தொடர்பாக, சர்வதேச நாடுகளுடைய கவனத்தை ஈர்ப்பதற்கு இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாக மாற்றப்பட வேண்டும். அவ்வாறு இது சர்வதேச பிரச்சனையாக மாற்றப்பட வேண்டுமேயானால் சர்வதேச ஜெனிவா சமவாயங்களுக்கு உட்பட்டு போர் கைதிகள் என்ற சொல்லாடல் தான் உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மாறாக ஒரு உள்நாட்டில் நடைபெறக்கூடிய குற்றம் என்ற வகையில், அவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஒரு வருத்தமான செய்தியையும் இந்த நேரத்தில் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம் என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>