தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகிறார். அன்றைய தினம் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வழியாக தருமபுரி மாவட்டம் வருகை தரும் உதயநிதி ஸ்டாலின் காலை 10 மணிக்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, முடிவுபெற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து தருமபுரி-பென்னாகரம் மெயின் ரோட்டில் உள்ள ஜோதி மகாலில் காலை 11 மணிக்கு தருமபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட் டத்துக்கு உட்பட்ட தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் காரிமங்கலம் அருகே உள்ள சி.எஸ். கார்டன் செல்கிறார். அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் செல்கிறார். பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்லும் அவர் அன்று மாலை 4.30 மணிக்கு பையூர் சந்திப்பில் தி.மு.க. கொடியேற்றுகிறார். மாலை 5 மணிக்கு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு கிருஷ்ணகிரி தேவராஜ் மகாலில் நடைபெறம் கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள் சந்திப்பில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். அன்று இரவு கிருஷ்ணகிரியில் தங்கும் அவர் மறுநாள் 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை பர்கூர் ஒப்பதவாடியில் நடைபெறும் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.