ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஐ.பெரியசாமி மகள் இந்திராணிக்கு சொந்தமான நூற்பாலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். இந்த நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி, வீட்டிற்கு வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் நான்கு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் வள்ளலார் நகரில் இந்திராணி வசித்து வருகிறார். இந்திராணிக்கு சொந்தமான நூற்பாலைகளில் ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.