தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமாயென காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கி கடந்த 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத் தொடர் நிறைவு நாளின்போது நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது வரை 10 நாட்கள் ஆகியும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படவில்லை. தொகுதி மறுவரையறையுடன் கூடிய மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு மீண்டும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகவே இந்த தாமதம் என தகவல் வெளியாகி உள்ளது.
காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்னும் அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படாதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பான அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஒரு சிறப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்காக தேடிக்கொண்டு இருக்கிறாரா? மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதற்கும், அது அதிகாரப்பூர்வமாக முடித்து வைக்கப்படுவதற்கும் இடையிலான கால இடைவெளி பொதுவாக 2 முதல் 4 நாட்கள் வரை இருக்கும். இந்த மக்களவை ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அது முடித்து வைக்கப்பட்டது குறித்த எந்த தகவலும் இன்னும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.