(கனகராஜா சரவணன்)
கிழக்கு மாகாணத்தில் தொழில்முனைவு, புதுமை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இங்குபேசன் நிலையத்தை தொழில் முயற்சியாளர்கள் முழுமையாக உபயோகிக்க வேண்டும் என தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.
கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப பீடம் தொழில் சுப்ப பூங்காவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சேவை மற்றும் உதவி மத்திய நிலையம் 4ம் திகதி அன்று வியாழக்கிழமை (4) விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோரல் ‘மாற்றங்களுக்கான நிலையம்’ திறந்து வைக்கப்பட்டது இதன்போது உரையாற்றிய அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இவ்வாறு தெரிவித்தார்.
தொழில் முயற்ச்சியாளர்களின் எதிர்கால கனவை நனவாக்குவதற்கு தேவையான தொழில் நுட்ப அறிவை வழங்குவதற்கான நிலையமாக செயற்படவுள்ளது. அதேவேளை கிழக்கு பல்கலைக்கழகமும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் வலுவான பிராந்திய பொருளாதார வளர்ச்சி உயர்த்துவதற்கு பெறுமதி சேர் பொருட்களின் தரம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு, வணிகத் திட்ட வழிகாட்டுதல், சந்தை இணைப்பு உதவிகள், தயாரிப்பு சோதனைகள், பேக்கேஜிங் வழிகாட்டுதல், லேபிளிங் மற்றும் பிராண்டிங் ஆலோசனை வழங்கள், தொழில் முனைவோருக்கான பயிற்சி திட்டங்கள் போன்ற பல தரப்பட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களின் தரம் மற்றும் இரசாயண உள்ளடக்கம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அதிகளவு பணம் செலுத்தி கொழும்பு போன்ற பிரதேசங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இவ் அரசாங்கத்தினால் 3வது இங்குபேசன் நிலையத்தினை கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல மில்லியன் பெறுமதியான நவீன சாதனங்கள் மூலம் பல தரப்பட்ட சேவைகள் வழங்கப்பட வுள்ளன.
இந்த ‘மாற்றத்திற்கான நிலையத்தி’னால் பெறுமதி சேர் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான ஆலோசனைகள், தொடக்கநிலை நிறுவனங்கள், இளைஞர் தொழில்முனைவோர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்தும் மையமாக செயற்படவுள்ளதுடன் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு பாரிய சேவை வழங்கவுள்ளது என்றார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ், கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் பி.பிரதீபன் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம்.நவவீ மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பேராசிரியர் கே.பிறேம்குமார், விதாதா நிறுவனத்தின் பணிப்பாளர் மனோஜ் கருணாரத்ன, கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடாதிபதி டுலங்க மேனிக்கே குணுபோலகம, கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் அமரசிங்கம் பகீரதன், விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சின் உத்தியோகத்தர்கள், விதாதா நிறுவன உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.