தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா). இவர் நடித்து கடந்த 2021-ல் வெளியான படம் அகண்டா. இப்படம் ஹிட் அடித்தநிலையில், இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. போயபதி ஸ்ரீனு படத்தை இயக்கியுள்ளார். ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இதில், சம்யுக்தா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதி வில்லன் ரோலில் நடித்துள்ளார். தமன் இசை அமைத்துள்ள இப்படம் டிச.5-ல் வெளியாகிறது. இந்நிலையில், அகண்டா வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா பேசியதாவது:- அகண்டா வெளியீடு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. சொந்த வீட்டிற்கு வந்ததுபோல் உணர்கிறேன். என் உயிருக்கு மேலான தமிழ் அன்பர்களே.. திரைத்துரை ரசிகர்களுக்கு எனது வணக்கம். சென்னை எனது ஜென்மபூமி.. தெலுங்கானா எனது கர்ம பூமி, ஆந்திரா எனது ஆத்ம பூமி. அகண்டா முதல் பாகம் கொரோனா காலத்தில் வெளியானது. லாக்டவுனுக்கு பிறகு வெளியான முதல் சூப்பர் ஹிட் படம். இதைதொடர்ந்து, அகண்டா 2ம் பாகம் எடுத்தோம். 130 நாட்களில் படிப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகிறது. தெய்வ சக்தியின் ஆசிர்வாதம் இல்லாமல் எதுவும் நடக்காது. இந்து சனாதன தர்மத்தை, நம் கலாசாரத்தை உலகத்திற்கு அறிவிக்கப்படும் ஒரு யாகம் இந்த அகண்டா தாண்டவம். நம் சக்தியை தூண்டும் ஒரு தாண்டவம். இந்த படத்தை பார்த்தால், சனாதன தர்மம் என்றால் என்ன? சனாதனம் என்பது சக்தி.. அது அடுத்த தலைமுறைக்கும் தெரிய வரும்.
நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. நான் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவாகிவிட்டது. 50 ஆண்டுகளாக கதாநாயகனாக நடிக்கிறேன். தெய்வத்தின் அனுகிரகத்தால், தாய், தந்தையின் ஆசிர்வாதத்தால் இது நடக்கிறது. வரும் 5ம் தேதி முதல் திரைக்கு வருகிறது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு செனஅறு பார்க்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.