வட்டகொடை தோட்டம், யொக்ஸ்போட் பிரிவில் (WATTEGODDE, YOXFORD) அமைந்துள்ள யொக்ஸ்போட் தமிழ் வித்தியாலயம் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த பாடசாலையில் கற்கும் மாணவர்களையும், கற்பிக்கும் ஆசிரியர்களையும் வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளதாக மாணவர்ளும், பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், இந்த படசாலையில் இருந்து சுமார் 4 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள வட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்வதற்கான சரியான பாதை வசதிகள் இல்லை என்பதோடு, சிறுவர்களை அந்த பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் நடைமுறைச் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளே யொக்ஸ்போட் பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.
ஆகவே, வட்டகொடை பாடசாலைக்கு காலையில் பிள்ளைகளை அழைத்துச் சென்று பின்னர் பிற்பகல் வேளையில் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதற்கான இயலுமை தமக்கு இல்லையென தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆகவே பாதுகாப்பான இடத்தில் மீண்டும் யொக்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தை அமைத்து தமது பிள்ளைகளின் கல்வி கற்கும் வாய்ப்பை உறுதிப்படுத்துமாறு தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.