விளவங்கோடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி பா.ஜ.க.வில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். விளவங்கோடு தொகுதி. காங்கிரஸ் சார்பில் விஜயதரணி போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ-வாக வென்ற தொகுதி இது. அவர் பதவிக்காலம் முடியும் முன்பே பா.ஜ.க-வில் இணைந்ததுடன் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். விளவங்கோட்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. கட்சிகளுக்கு செல்வாக்கு அதிகம் உண்டு. இந்த சூழலில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில், காங்கிரஸ் சார்பில் டி.டி.பிரவீன், பா.ஜ.க சார்பில் விஜயதரணி, நா.த.க சார்பில் மரிய ஸ்டெல்லா, த.வெ.க சார்பில் மைக்கேல் குமார் ஆகியோர் போட்டியிட்டனர். அதில், இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் டிடி பிரவீன் , தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் கே.மைக்கேல் குமாரை விட 20970 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். இது விஜயதரணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்த விஜயதரணி திடீரென கட்சி மாறிச் சென்றதும் உள்ளூர் மக்களிடையே அவரது செல்வாக்கு சரிய காரணமாக அமைந்தது. தேர்தல் நேரத்தில் பா.ஜ.க-வில் நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என ஏற்கெனவே விஜயதரணி அதிருப்தியில் இருந்தார். பாரம்பரிய காங்கிரஸ் வாக்குகள் பெரும்பாலும் கை சின்னத்துக்கு சென்றது. ஆனால், பா.ஜ.க வாக்குகளை அதிகமாக த.வெ.க கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் பா.ஜ.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் விஜயதாரணி தன்னை இணைத்துக்கொண்டார். சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவர், அமைச்சர் என்.ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் இணைந்தார்.