பொலன்னறுவை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவினால், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் பெற்றோருக்கு அச்சுறுத்தல்

Share

ஆறு மாதங்களுக்கு முன்பு பொலன்னறுவை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவின் அதிகாரிகளினால், மார்பின் மீது துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்ட ஜி. ஏ. கே. டிஷான் என்பவரின் பெற்றோரை அச்சுறுத்தி, பொலிஸார் சட்டவிரோதமான முறையில் செயற்பட்டு வருவதாக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

போலியான அச்சத்தை உருவாக்கும் பொலிஸ்

மே 26ஆம் திகதி சிவில் உடையில் உயிரிழந்தவரின் வீட்டிற்குச் சென்ற இருவர், ரி-56 ரக துப்பாக்கி ஒன்று குறித்து விசாரித்துள்ளதுடன், அது தொடர்பாக தந்தையிடம் வாக்குமூலம் ஒன்று பெற வேண்டும் என உயிரிழந்த டிஷானின் சகோதரரிடம் தெரிவித்துள்ளதாக, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர், சட்டத்தரணி சேனக பெரேராவினால் குறித்த அதிகார சபையின் தலைவருக்கு மே 29ஆம் திகதி எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணையின் பிரதான சாட்சிகளான, உயிரிழந்த டிஷானின் தாய் மற்றும் தந்தையை அச்சமடையச் செய்து, இந்தச் சம்பவத்தை மூடிமறைக்கும் நோக்கத்துடனேயே பொலிஸார் இவ்வாறு செயற்பட்டு வருவதாக சட்டத்தரணி பெரேரா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“தனது மகனின் மரணம் தொடர்பாக வெலிகந்த பொலிஸாருக்கு எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஒரு சூழ்நிலையில், அதே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இவ்வாறு எந்தவொரு அடிப்படையுமின்றி மேற்கொள்ளும் அச்சுறுத்தல்கள் காரணமாக, பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள AR /73/25 என்ற வழக்கின் பிரதான சாட்சிகளான ஜி.ஏ.கே. திலகசிறி மற்றும் எச்.எம். தமயந்தி பத்மினி ஆகிய இருவருக்கும் சாட்சியமளிப்பதில் பெரும் பாதிப்பும் அழுத்தமும் ஏற்படுவதற்கான ஆபத்து காணப்படுகிறது” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மனதுங்க சார்’ உயர் இடத்திற்கு சென்றதும் கவனிப்பார்

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட டிஷான் வசித்த வெலிகந்த, கந்தகாடு கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. அவ்வாறிருக்கையில், பொலிஸார் சாட்சிகளின் வீட்டிற்கு மட்டும் வந்து, வீதிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ரி-56 ரக துப்பாக்கி ஒன்று குறித்து விசாரணை நடத்துவது கடுமையான சந்தேகத்தை தோற்றுவிப்பதாக சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவிக்கிறார். பொலிஸாரின் இந்தச் செயற்பாட்டைப் பார்க்கும்போது, சாட்சிகளை அச்சமடைய செய்வதற்கான முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

உயிரிழந்த டிஷானின் வீட்டிற்கு இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் வந்து பல்வேறு யோசனைகள், அழுத்தம் கொடுக்கும் வகையிலான கருத்துகளையும் தெரிவித்துள்ளதாக அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்திற்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, எதிர்காலத்தில் உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளதால், இந்தச் சம்பவத்தைச் சமரசத்திற்கு கொண்டு வருமாறு அவர்கள் யோசனையை முன்வைத்துள்ளனர் என்றும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சிகளுக்கு அழுத்தம்

கடந்த காலங்களில் நடைபெற்ற ஒவ்வொரு சாட்சி விசாரணைத் தவணைகளின் போதும், பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணிகளுக்கும், படுகொலை செய்யப்பட்ட டிஷானின் பெற்றோருக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவ்வித காரணமுமின்றி அவ்வப்போது தமது வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்துவது தற்போது, தங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கொலை செய்யப்பட்ட டிஷானின் சகோதரரான ஜி.ஏ.கே. தில்ஷான் தெரிவிக்கின்றார்.

“இது எங்களுக்கு பெரும் தொந்தரவாக உள்ளது. வழக்கின் சாட்சி விசாரணை நெருங்கும்போது பொலிஸார் வீட்டிற்கு வருகிறார்கள். அப்பா இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அண்ணனைப் பற்றி பல விடயங்களைக் கூறுகிறார்கள். அம்மாவும் அப்பாவும் கடும் அச்சத்தில் இருக்கிறார்கள். சாட்சி விசாரணை நடப்பதுவும் நாளுக்கு நாள் தள்ளிப்போகிறது. அண்ணனைக் கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைப்பது ஒருபுறமிருக்க, அதற்காக நியாயமான விசாரணை நடக்குமா என்பது கூட இப்போது எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. ஏனெனில், பொலிஸார் அந்தளவுக்கு எங்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள்” என தில்ஷான் கூறுகிறார்.

பொலன்னறுவை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு மற்றும் வெலிகந்த பொலிஸார், அதேபோன்று பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க ஆகியோரின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபைச் சட்டத்தின் விதிகளின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி சேனக பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

வெலிகந்த, சிங்ஹபுர பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதான ஜி. ஏ. கே. டிஷான், அவரின் மார்பை துளைத்த துப்பாக்கியின் தோட்டாவினாலேயே உயிரிழந்துள்ளார் என்பது பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட தடயவியல் மருத்துவ அதிகாரி லசந்த எஸ். கே. டி சில்வா, ஜனவரி 13ஆம் திகதி நடத்திய பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>