மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு- பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கையில் கருப்பு பட்டி அணிந்து குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்.

Share
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)

(21-02-2026)
மன்னார் மாவட்ட குடும்ப நல   உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து 21ம்திகதி அன்று சனிக்கிழமை (21-02-2026) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன் னெடுத்ததோடு,மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை கடமைக்கு சென்ற நேரத்தில் அவர் இடை மறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்ட தோடு, அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

கடமை நேரத்தில் குறித்த குடும்ப நல உத்தியோகத்தர் வழிமறிக்கப்பட்டு, உடமைகள் அபகரிக்கப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும்,குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கையில் கருப்பு பட்டி அணிந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த அச்சுறுத்தல் காரணமாக 21ம் திகதி அன்று சனிக்கிழமை (21) காலை 9.30 மணி அளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குடும்ப நல  உத்தியோகத்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வரை பேரணியாக சென்றனர்.அங்கிருந்த உயர் அதிகாரியிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்து மகஜர் ஒன்றை கையளித்தனர்.

தொடர்ச்சியாக நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும்,பெண்கள் தனியாகச் செல்லும் பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்,மன்னார் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும்.என்ற கோரிக்கையை முன் வைத்தனர்

.
மன்னார் நகரின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தனியாக நடமாடும் இடங்களை கண்காணித்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்களால் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுவரை இவ்வாறான 4 சம்பவங்கள்   பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் வீதிக்கு இறங்கி நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ள தோடு, தமக்கான பாதுகாப்பு இல்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>