(மன்னார் நிருபர்)
(11-05-2026)
மன்னார் நகரசபையின் மேற்பார்வையில், மன்னார் நுழைவாயில் பாலத்திற்கு அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் கடலோரப் பூங்காவின் (Coastal Park) முதற்கட்டப் பணிகளை வடமாகாண சுற்றுலா அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டனர்.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதி பங்களிப்புடன், மன்னார் நகரசபையின் மேற்பார்வையில் இந்தப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
இப்பூங்காவின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதனை பார்வையிட்ட அதிகாரிகள் கட்டுமானத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக, தரைத்தளம் மற்றும் பூங்காவின் அழகுபடுத்தல் பணிகளில் காணப்படும் பலவீனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்ட குழுவினர், அவற்றைச் சீர் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.
இது குறித்து வட மாகாண சுற்றுலாப் பணியக தலைவர் கருத்து தெரிவிக்கையில்
மன்னார் நகரசபைக்கு உட்பட்ட மன்னார் கோஸ்டல் பார்க் (Coastal Park) பகுதியை பார்வை யிட்டோம் மன்னார் நுழைவாயிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள இது, மாலை நேரங்களில் மக்கள் வந்து செல்லக்கூடிய ஒரு அழகான இடமாகும்.
வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் நிதியுதவியுடன் முதற்கட்டப் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளன.எனினும், தற்போது செய்யப் பட்டுள்ள பணிகள் எங்களுக்கு முழுமையான திருப்தி இல்லை.
சில கட்டுமானக் குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி, இரண்டாம் கட்டப் பணிகளின் போது இப்பூங்கா இன்னும் மெருகூட்டி, சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதியவர்கள் அமைதியாக பொழுது போக்கும் இடமாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்
இந்த விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் மன்னார் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் அக்கட்சியின் முக்கிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.