மாகாண சபை தேர்தல் தொடர்பான தெரிவுக்குழு விவகாரம் காலத்தை கடத்தும் நாடகம் என்கிறார் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்!

Share

பு.கஜிந்தன்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தும் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பாக இந்த அரசாங்கமானது தெரிவு குழு விடயத்தை கொண்டு வருவது ஒரு காலத்தை கடத்துகின்ற நாடகம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குதாஸ் தெரிவித்துள்ளார்.

8ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கமானது மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பான தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மூலமாக பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளது.

உண்மையிலேயே இந்த அரசாங்கமானது மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக தெரிவுக் குழுவை நியமிப்பது என்பது ஒரு அவசியமற்ற விடயம். ஏனெனில் இந்த அரசாங்கமானது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ளது.

உண்மையிலேயே மாகாண சபை தேர்தலை நடத்துவதாக இருந்தால் இந்த அரசாங்கம், 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 17ஆம் இலக்க சட்டத்தை மாற்றியமைத்து உடனடியாக பழைய முறை மூலம் தேர்தலை நடாத்த முடியும். அவ்வளவு அதிகாரமும் பலமும் இந்த அரசிடம் உள்ளது.

இந்த தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அனுர அரசுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினாலேயே இந்த தெரிவு குழுவை கொண்டு வருகின்றது. கடந்த காலத்தில் முரண்பாடாக இருந்த அந்த எல்லை நிர்ணயம் என்ற விடயத்தை மீண்டும் கொண்டு வந்து காலத்தை இழுத்தடிக்கின்ற நோக்கத்தில் தான் இந்த தெரிவுக்குழு விடயத்தை பிரேரணை மூலமாக பாராளுமன்றத்தில் கொண்டு வருகின்றார்கள்.

கடந்த காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்த அனுரகுமார உள்ளடங்கலான தரப்பினர், கடந்த ஆட்சியாளர்கள் இவ்வாறான தெளிவுக்குழுவை கொண்டு வரும்போது கடுமையாக விமர்சித்தவர்கள். இந்த தெரிவுக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் எல்லாம் காலத்தை கடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை நீர்த்துப்போக செய்கின்ற ஒரு விடயம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த அடிப்படையிலேயே இந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான தெரிவிக்கு குழுவும் கொண்டுவரப்படுகின்றது.

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயலால் நாட்டு மக்கள் அனைவரும் பாரிய இழப்பினை சந்தித்திருக்கின்றார்கள். பொருளாதாரம் பின்னடைந்து இருக்கின்ற நிலையில் மீளவும் நாட்டை கட்டை எழுப்ப இரண்டு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. இந்நிலையில் நாட்டினை மீளவும் கட்டி எழுப்புவதற்கு ஏதுவான ஒரு கட்டமைப்பு தான் மாகாண சபை.

ஒன்பது மாகாண சபைகளும் மக்கள் பிரதிநிதிகளால் நிர்வகிக்கப்படுமாக இருந்தால் அது மத்திய அரசாங்கத்துக்கு ஒரு பலமாக இருக்கும். அரசாங்கம் கொண்டு வருகின்ற நடைமுறைகளை இலகுவாக செய்யக் கூடியதாக இருக்கும்.

எல்லை நிர்ணயமானது மீள் நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் தான் தேர்தலை நடாத்துவது என்ற விடயம் தெரிவுக்குழு மூலம் வருவதற்கு தான் இந்த அரசாங்கம் காத்திருக்கின்றது என்ற எதிர் அணியினரின் குற்றச்சாட்டுகள் எதிர்காலத்தில் உண்மையாகத்தான் இருக்கப் போகின்றது என நான் நினைக்கின்றேன்.

அரசு பலமாக இருக்கின்ற சூழ்நிலையில் பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்தலாம். அல்லது எல்லை நிர்ணயம் என்பதனை ஒரு மாதத்திற்குள் முடிவுறுத்தி தேர்தலை நடத்தலாம். இவ்வாறு இல்லாவிட்டால் தெருவுக்குழு என்பது காலத்தை கடத்தும் நாடகமாகத்தான் பார்க்கப்படுகின்றது என்றார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>