மாணவர்களின் வாழ்வாதார வறுமையை ஒழிக்காமல் ஒருபோதும் கல்வியில் உயர்ச்சியை எட்ட முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அண்மையில் ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்தில் சிறப்பு உரை ஆற்றும் போது புதிய கல்விச் சீர் திருத்தம் மூலமே மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்க முடியும் எனவும் அதனால் தாங்கள் புதிய கல்விச் சீர்திருத்தம் ஒன்றை விரைவாக கொண்டுவர இருப்பதாகவும் தெரிவித்தார்.
நாட்டின் கல்வி முறையில் பல குறைபாடுகள் இருந்தாலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தடையாக இருப்பது மாணவர்களின் வாழ்வாதார வறுமையே பிரதான இடம் பெறுகின்றது. அண்மைய காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வி இடை விலகலுக்கு காரணம் கொடிய குடும்ப வறுமை இதனால் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்விச் செயற்பாட்டில் இருந்து இடை விலகி கூலி வேலைகளுக்கு செல்வதை காணமுடிகின்றது வேறு பல மாணவர்கள் தவறான வழிகளில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் சமூக விரோத செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.
மாணவர்களின் பாடசாலை கல்வியி்ல் இடைவிலகலை தூண்டுவது தற்போதைய கல்வி முறையல்ல மாறாக குடும்ப வறுமையும் வாழ்வாதாரச் சுமையுமே ஆகும்.
ஆகவே ஜனாதிபதி புதிய கல்விச் சீர் திருத்தத்தை கொண்டு வந்தாலும் மாணவர்கள் தொடர்ச்சியாக 13 ஆம் வகுப்பு வரை கல்வி கற்பதற்கான குடும்பச் சூழலை முதலில் சீரமைக்க வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அரச மானியங்களை வழங்கி வருமானத்திற்கு ஏற்ப பொருட்களை வாங்கக் கூடிய ஏற்பாடுகளை ஐனாதிபதி விரைந்து உருவாக்க வேண்டும் இதன் மூலம் குடும்பங்களின் வாழ்வாதார வருமானச் சுமைகளை குறைத்து மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் ஆர்வத்துடன் பயனிப்பதற்கு வழி திறக்க முடியும் என தெரிவித்தார்.