தமிழ்நாடு முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் கடந்த 10-ந்தேதி பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து முக்கியமான 3 கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், வைகோ, திருமாவளவன், சீமான் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களை அவர்களது இல்லத்திற்கே நேரில் சென்று விஜய் வாழ்த்து பெற்றார். தொடர்ந்து தனது பணிகளையும் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன், முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு சென்று முதல்-அமைச்சர் விஜய்யை கமல்ஹாசன் சந்தித்துள்ளார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.