முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ_9 வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகள் – மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு

Share

ஜெகதீஸ்வரன் பிரஷாந்த்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏ_9 வீதியில் உள்ள பனிக்கன்குளம் கிழவன்குளம் கிராமங்களின் பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றாமல் செல்கின்ற விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை போக்குவரத்து சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது

குறித்த விடயம் ஊடகங்களில் வெளிவந்ததும் அடிப்படையில் 1996/21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக இந்த விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு தலையிட்டு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளது

குறித்த கடிதத்தில்

பிரதான பிராந்திய முகாமையாளர். இலங்கை போக்குவரத்துச் சபை,வடக்கு வலயம்
கோண்டாவில்

முறைப்பாட்டிலக்கம் – HRC/JA/SuoMoto/003/2023

(1996/21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை)

“பேருந்துகள் ஏற்றாது செல்வதனால் வீதியில் அந்தரிக்கும் மாணவர்கள்” எனும் தலைப்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இன் பிரகாரம் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது.

குறித்த செய்திகளில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம் மற்றும் கிழவன் குளம் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களை A-9 வீதியில் பயணிக்கும் பேருந்துகள் ஏற்றாது சென்றதால் மாணவர்கள் பரீட்சைக்குச் செல்ல முடியாத நிலைமை தோன்றியுள்ளது என்றும் பரீட்சை நடைபெற்ற நாளான நேற்று முன்தினம் மாணவர்கள் தரிப்பிடத்தில் காத்திருந்தும் காலை 8.12 மணிவரை எந்தப் பேருந்துகளும் மாணவர்களை ஏற்றவில்லை. பின்னர் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் தரிப்பிடத்துக்கு விரைந்த பொலிஸார் அரச பேருந்து வருவதை அவதானித்து பேருந்தை மறித்த போது நடத்துநருக்கும் பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட பின்னரே மாணவர்களை ஏற்றிச் சென்றதுடன், மாணவர்களுக்கு பருவகாலச் சிட்டை பெறுமாறு இ. போ.ச அதிகாரிகளால் ஆலோசனை வழங்கப்பட்டதன் பிரகாரம் சிட்டை பெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும் அதன் பின்னரே தம்மை பேருந்துகள் ஏற்றாமல் செல்வது அதிகரித்துள்ளது என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் பலருக்குத் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அத்தோடு வீதியை மறித்து போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

நீதி மன்றுக்கும் கொண்டு செல்லப்பட்டு வடமாகாண போக்குவரத்துப் பிரிவுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் A-9 வீதியை மூடிப் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாக குறித்த பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டள்ளது.

மேற்படி பத்திரிகையில் தெரிவித்த சம்பவம் மட்டுமன்றி ஏனைய போக்குவரத்துப் பாதையிலும் இவ்வறான சம்பவங்கள் இடம்பெறுவது பத்திரிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் ஆணைக்குழுவினால் அவதனிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்குறித்த குறித்த சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களின் சாரதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி ஆணைக்குழுவிற்கு அறிக்கை ஒன்றினை உடன் சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். எனவும்

இவ்விடயமானது, 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 18 (C) இன் பிரகாரம் தேவைப்படுத்தப்படுகின்றது. எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த கடிதத்தின் பிரதி தலைவர் வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, வடக்கு மாகாணம் அவர்களுக்கும் தனியார் போக்குவரத்து சாரதி மற்றும் நடத்துநர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>