யோகி பாபுவின் 300 ஆவது திரைப்படமான “அர்ஜுனன் பேர் பத்து” ஜூலை 17ம் தேதி வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது நிறைய படங்களில் மும்மரமாக நடித்துவருகிறார்.
கடந்த 2009ம் ஆண்டு அமீர் நடிப்பில் வெளியான யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், கலகலப்பு (2012), மான் கராத்தே (2014) போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பால் புகழ் பெற்றார். அதனை தொடர்ந்து கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள், ஜெயிலர், கடைசி விவசாயி, மெர்சல், மாஸ்டர் மற்றும் மாவீரன் போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றார். நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அர்ஜுனன் பேர் பத்து’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நடிகர்கள் காளி வெங்கட், அருள்தாஸ், லெனின் பாரதி, சென்றாயன், மைனா நந்தினி, அனாமிகா மஹி ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் யோகி பாபு நாயகனாக நடிக்கும் ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த மார்ச் 18 ம் தேதி வெளியானது. இது யோகி பாபு நடிக்கும் 300 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ திரைப்படத்தின் ‘சாமி தந்த வரமே’ பாடல் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படம் ஜூலை 17ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.