(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் ஊடகவியலாளர் கோகுலதாஸன் வீட்டுக்கு சென்ற வாழைச்சேனை பிரதேச சபை உப தவிசாளர் ஊடகவியலாளரை 29ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை (29-05-2026) அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மேற்படி ஊடகவியலாளர் முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வாரம் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் பிரதேச சபை தவிசாளர்கள் தமிழ் மக்களின் பல பிரச்சனைகளை முன்வைக்கவில்லை என குறித்த ஊடகவியலாளர் கல்குடா சிவில் சமூகம் என இயங்கிவரும் வாட்ஸ் அப் தளத்தில். தவிசாளர்களை குற்றம் சாட்டி கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் வாழைச்சேனை பிரதேச சபையை நிர்வகிக்கும் தமிழரசு கட்சியின் உப தவிசாளர் குழைந்தைவேல் பத்மநீதன் குறித்த ஊடகவியலாளர் வீட்டிற்கு சம்பவ தினமான 29ம் திகதி அன்று வெள்ளிக்கிழமை காலையில் சென்று அவரை நோக்கிச் சத்தமிட்டு பொதுமக்கள் பார்க்கும் வகையில் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் உப தவிசாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை கடந்த வாரம் அந்த பகுதி மற்றுமொரு ஊடகவியலாளர் ருத்திரன் வீட்டுக்கு சென்று 5 பேர் கொண்ட குழு இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை அறிக்கையிட மறுத்த வருக்கு அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். அவ்வாறே உள்ளுர் அரசியல் வாதிகள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.