அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தியது. இதில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் கைப்பற்றி மூடியது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவின் கப்பல்கள் ஈரானை முற்றுகையிட்டு உள்ளன. ஈரானின் கப்பல்கள் உள்ளே செல்லவோ, வெளியே வரவோ விடாமல் அவை தடுத்து வருகின்றன. இதனால், பல்லாயிரக்கணக்கான கோடி ஈரானுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என அமெரிக்கா தெரிவித்தது. இந்த நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியின் வழியே எதிரிகளின் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதற்கு நாங்கள் மீண்டும் அனுமதி அளிக்கமாட்டோம் என ஈரான் கூறியுள்ளது. இதுபற்றி ஈரானின் முதல் துணை ஜனாதிபதியான முகமது ரெசா ஆரிப் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் எங்களுடைய இறையாண்மைக்கான உரிமையை நாங்கள் கைவிட்டு விட்டோம். இதற்கு முன்பு, ராணுவ தளவாடங்கள் இந்த வழியே செல்ல நாங்கள் அனுமதித்தோம். அவை எங்களுக்கு எதிராக பயன்படுத்தும் நோக்கம் கொண்டவை. ஆனால், மீண்டும் அதற்கு நாங்கள் அனுமதி அளிக்க போவதில்லை என்றார். ஹார்மூஸ் ஜலசந்தி பகுதி வழியே செல்லும் கப்பல்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக ஈரான் பரிசீலனை செய்து வருகிறது என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர், இரு மாதங்களுக்கு முன்பு கூறினார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஈரானிய நாடாளுமன்ற தேச பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குழுவின் தலைவர் இப்ராகிம் அஜிஜி நேற்று கூறும்போது, ஹார்மூஸ் ஜலசந்தியின் வழியே குறிப்பிட்ட பாதையில் கப்பல்கள் பயணிக்கும் வகையிலான இயக்க நடைமுறைகளை, அதிகாரிகள் தயாரித்து வைத்துள்ளனர். அவை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.
ஈரானால் நிர்வகிக்கப்படும் இந்த வழியில், எங்களுடன் ஒத்துழைக்கும் நாடுகளின் வர்த்தக கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். இந்த போக்குவரத்து மேலாண்மை நடைமுறைக்கு ஈடாக, ஈரான் கட்டணம் வசூலிக்கும் என கூறினார். இந்த சூழலில், எதிரிகளின் ஆயுதங்களுக்கு அனுமதி இல்லை என ரெசா கூறியுள்ளார்.