பிலிப்பைன்ஸ்: குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து – 8 பேர் உயிரிழப்பு
Share

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டிடத்தின் பெரும்பகுதி மரத்தால் கட்டமைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. குடியிருப்பில் இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்ததால் தீப்பற்றியதை உடனடியாக உணரவில்லை. தீ பரவிய நிலையில், எழுந்து வெளியேறுவதற்குள் நாலாபுறமும் தீ சூழ்ந்துவிட்டது. இதனால் சிலர் உள்ளே சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மூன்று தளங்கள் கொண்ட அந்த கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் 6 பேரின் உடல்களும், தரைத்தளத்தில் 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. 2-வது தளத்தில் இருந்து தீ பரவியதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.