கனடா ‘பொற்சதங்கை கலைக்கூடம்’ நடன ஆசிரியை பொன்மதி பத்மவரதனின் மாணவி அபர்ணா உதயகுமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் சபையோரால் பாராட்டப்பெற்றது
கனடா ‘பொற்சதங்கை கலைக்கூடம்’ நடனப் பள்ளி ஆசிரியை பொன்மதி பத்மவரதனின் மாணவி அபர்ணா உதயகுமாரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று மிசிசாகா நகரில் உள்ள ‘மெடோவேல் தியேட்டர் மண்டபத்தில் நடைபெற்றபோது. குருவின் அர்ப்பணிப்பான கற்பித்தல் திறன் மற்றும் மாணவி அபர்ணா. பரதக் கலையின் மீது காட்டிய சிரத்தை மற்றும் ஆர்வம் ஆகியவற்றால் சிறந்த ஒரு விழாவாக நன்கு ரசிக்கப்பெற்றும் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்றும் ஒரு பேசப்படும் அரங்கேற்ற விழாவாக பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
நடனச் செல்வி அபர்ணாவின் குருவின் ஏற்பாட்டில் சிறந்த அணிசேர் கலைஞர்கள் அன்றைய தினம் மேடையை அலங்கரித்தனர்.அவர்களது இசைப் பங்களிப்பானது அபர்ணாவின் அரங்கேற்றத்திற்கு முன்னதான நேர்த்தியான கூட்டுப் பயிற்சி மற்றும் ஒத்திகை ஆகியவற்றாலும் குரு பொன்மதி பத்மவரதன் அவர்களது கற்பித்தல் திறன் மற்றும் ஒழுங்கமைக்கப்பெற்றிருந்த ‘நட்டுவாங்கம்; ஆகியவற்றால் சபையோர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாராட்டும் தரத்தைப் பெற்றிருந்தது என்றால் அது மிகையாகாது.
மேடையை அலங்கரித்த முதிர்ச்சியும் அனுபவமும் கொண்ட அணி சேர் கலைஞர்களது அர்ப்பணிப்பான பங்களிப்பு அபர்ணாவின் அரங்கேற்றத்தை மேலும் சில படிகள் உயரத்திற்கு இட்டுச் சென்றது என்பதை ரசிகர்கள் தங்கள் கருத்துக்களாகப் பகிர்ந்த சென்றனர்.
மேற்படி அரங்கேற்றத்திற்கு பிரதம விருந்தினராக அழைக்கப்பெற்றிருந்த ‘பரதகலா வித்தகர்’ ஶ்ரீமதி குமுதினி ஶ்ரீகாந்தன் நடனச் செல்வியின் சிறப்பான அம்சங்களை குறிப்பிட்டு அவரது குருவையும் பாராட்டிச் சென்றார். அதற்கு முன்னர் உரையாற்ற அழைக்கப்பெற்றிருந்த நடனச் செல்வி அபர்ணாவின் தமிழாசிரியையான திருமதி சாந்தி நிரஞ்சன்குமார் தனத உரையை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் ஆற்றினார். அவர் தனது உரையில் :”பரதநாட்டியத்தை கற்பதும் அதை மேடையில் சமர்ப்பணம் செய்வது வெறும் உடலின் அசைவுகளை காட்டுவதற்காக அல்ல என்பதை அதை ரசிக்கும் நாம் உணரவேண்டும். பரதநாட்டியம் என்பது ஒரு புனிதமானதும் தெய்வீகத்தன்மை நிறைந்ததுமான ஒரு கலை வடிவம். அதனைக் கற்பதாலும் கற்பிப்பதாலும் மன அழுத்தங்கள் குறைவதற்கு சாத்தியமான அம்சங்கள் உள்ளன என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளல் வேண்டும். இன்றைய அரங்கேற்றச் செல்வி அபர்ணாவின் குரு ஶ்ரீமதி பொன்மதி பத்மவரதனின் அர்ப்பணிப்பான கற்பித்தல் மற்றும் வழிகாட்டுதல் ஆகியன இன்று எமக்கு ஓரு எதிர்கால நர்த்தகியை உருவாக்கித் தந்துள்ளது” என்று புகழாரம் சூட்டினார்.
புஸ்பாஞ்சலி என்னும் முதலாவது உருப்படியிலிருந்து இறுதிவரை மிகுந்த அவதானத்துடனும் உற்சாகத்துடனும் தனது நடனங்களை மேடையில் சமர்ப்பணம் செய்த தனது மாணவிக்கு பாராட்டுக் கேடயம் மற்றும் சான்றிதழ் ஆகிவற்றை வழங்கிச் சிறப்புச் செய்தார் அவரது குரு ஶ்ரீமதி பொன்மதி பத்மவரதன் அவர்கள்.
சத்தியன்