ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தப் போவது இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை எந்த ஒரு நாடும் பயன்படுத்தக்கூடாது; சாதாரண ஆயுதங்களை கொண்டே ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படைகளை அமெரிக்கா ஏற்கனவே அழித்துவிட்டது. ஈரான் மீண்டும் ஆயுதங்களை திரட்ட முயன்றாலும், அவற்றை ஒரே நாளில் அழிக்கும் திறன் அமெரிக்காவிடம் உள்ளது என்றும் கூறிய டிரம்ப், அமைதிப் பேச்சுவார்த்தையில் அவசரம் காட்டப் போவது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்ற நிலையில், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததன் பேரில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஈரான் – அமெரிக்கா இடையே நடைபெற்ற முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், விரைவில் இரண்டாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகள் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.