கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பின் சென்டினரி மருத்துவமனையில் புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
ஒன்ராறியோ அரசின் 82 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டின் ஆதரவுடன் அமைக்கப்படும் இந்த புதிய அவசர சிகிச்சைப் பிரிவு, தற்போதைய அவசர சிகிச்சைப் பிரிவை விட 36,000 சதுர அடிக்கும் அதிகமான அளவிற்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன் மூலம் வேகமாக வளர்ந்து வரும் ஸ்காபரோ மக்கள் தொகைக்கு விரைவானதும் வசதிகள் நிறைந்ததுமான மற்றும் உயர்தர அவசர மருத்துவ சேவைகளை அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே வழங்குவதற்கான திறன் அதிகரிக்கப்படுவதுடன், இப்பகுதியில் சுமார் 400 நல்ல ஊதியமுள்ள வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் வாய்ப்பும் உருவாகின்றது.
“ஸ்காபரோ பிரதேசமானது. தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், எமது சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப சுகாதார சேவைகளையும் உட்கட்டமைப்பையும் விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது. சென்டினரி மருத்துவமனையின் இந்த புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு, குடும்பங்கள் அவர்களுக்கு தேவையான நேரத்தில், வீட்டிற்கு அருகிலேயே விரைவான மற்றும் உயர்தர சிகிச்சையைப் பெற உதவும். ஸ்காபரோ மக்களுக்காக இந்த முக்கியமான முதலீட்டை முன்னெடுப்பதில் நான் பெருமையடைகிறேன்,” என சுகாதார இணை அமைச்சர் விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்தார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க விரிவாக்கத்தின் மூலம், ஸ்காபரோ குடும்பங்களுக்கு தலைமுறைகள் கடந்தும் தேவையான உயர்தர மருத்துவ சேவைகளை அவர்களின் சமூகத்திற்கு அருகிலேயே வழங்கும் வலுவான மற்றும் நவீன சுகாதார அமைப்பை உருவாக்குவதில் ஒன்ராறியோ அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது என்றும் அங்கு உரையாற்றிய அனைவரும் தெரிவித்தனர்.