(கனகராஜா சரவணன்)
கிழக்கு பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் 19ம் திகதி அன்று புதன்கிழமை (19-08-2026) பிற்பகல் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதுடன் அதனைப் பார்த்த அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .இவ்வாறிருக்க. மட்டக்களப்ப மாவட்டத்தில் 7 மாதத்தில் 84 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவியான கே. யாழினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தெரியவருவதாவது
குறித்த கல்லூரிக்கு நாடகத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டதையடுத்து குறித்த மாணவி கல்லூரி விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.
இந்நிலையில் விடுதியிலுள்ள அறையில் சம்பவ தினமான இன்று பிற்பகல் சுமார்.12.00 மணியளவில் குறித்த மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார் இதனைப் பார்த்த அதிர்ச்சியில் இரு மாணவிகள் மயங்கி வீழ்ததையடுத்து அங்குள்ள மாணவர்கள் உடனடியாக தற்கொலை செய்து கொண்ட மாணவியையும் மயங்கி வீழ்ந்த மாணவிகளையும் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்
இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் மயங்கி வீழ்ந்த மாணவிகள் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் உயிரிழந்த மாணவியின் சடலம் பிரே பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதத்தில் 84 பேரும் கடந்த ஜூன் மாதத்தில் 8 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன்; கடந்த வருடம் 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரையான ஒரு வருடத்தில் 164 தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.