பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பெஷாவருக்கு பேருந்து சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 48 பேர் பயணம் மேற்கொண்டனர். கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் பிரேக் செயலிழந்ததாலேயே விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.