‘யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்’ யாழ் மாநகர சபைக்கே உரித்தானது என சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share

ந.லோகதயாளன்.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் யாழ் மாநகர சபைக்கே உரித்தானது அங்கே எவரும் உள்நுழைய முடியாது என யாழ்ப்பாணம் மாநகர சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு 14 ம் திகதி வியாழக்கிழமை அன்று முதல்வர் திருமதி மதிவதனி விவேகானந்தராயா தலைமையில். நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான முதலீடுகளும் சொந்துக்களும் மாநகரசபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டுமே தவிர அதை வேறெவரும் ஆளுகை செய்ய முடியாது. அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார நிலையத்தின் நிர்வகிப்பும் மாநகர சமையிடமே இருக்க வேண்டும் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம் தொடர்பில் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நம்பிக்கை நிதியம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு முன்மொழிவொன்றை திருமதி யோகேஸ்வரி பிரஸ்தாபித்திருந்தார்.

யாழ்ப்பாணம் மாநகரத்தின் இதயப்பகுதியில் மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் இந்திய அரசாங்கத்தின் கொடையாக உருவான “யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்” தற்போது ஒரு புதிய நிர்வாகக் கட்டமைப்புக்குள் நுழைக்கப்படுகின்றது.

அத்துடன் இதற்காக ஒரு நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தையும் (Trust Fund) அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இருப்பினும், இந்த நகர்வின் பின்னணியில் உள்ள சில கசப்பான உண்மைகளை நாம் வெளிப்படுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை மக்களின் அடிமட்ட அதிகார அமைப்புகளாகும். அதன் பிரகாரம் மாநகர சபைக்குச் சொந்தமான ஒரு காணியில் அமைந்துள்ள ஒரு கலாசார நிலையத்தை நிர்வகிக்கும் முழு உரிமையும் அந்தச் சபைக்கே இருக்க வேண்டும்.

ஆனால், மத்திய அரசின் கலாசார அமைச்சு குறிப்பாக புத்தசாசன அமைச்சு இதன் நிர்வாகத்தை தன்வசம் வைத்திருக்க முற்படுவது, இலங்கையின் அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டிற்கும், உள்ளூராட்சித் தன்னாதிக்கத்திற்கும் முற்றிலும் முரணானது.

அதேநேரம் இந்த பிரம்மாண்ட நிலையத்தை நிர்வகிக்கத் தேவையான பாரிய நிதி மூலம் மாநகர சபையிடம் இல்லை என்பது கசப்பான யதார்த்தம்.

இந்த நிதிப் பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, ‘கூட்டு நிர்வாகம்’ என்ற போர்வையில் மத்திய அரசு உள்நுழைந்துள்ளது.

நிர்வாகக் குழுவில் மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், முடிவெடுக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது.

மத்திய அரசு மற்றும் கலாசார அமைச்சின் சார்பிலான உறுப்பினர்களின் எண்ணிக்கை, மாநகர சபை சார்பான பிரதிநிதிகளை விட அதிகமாக உள்ளது.

இதன் மூலம், மாநகர சபையின் காணியில் அமைந்துள்ள ஒரு சொத்தின் மீதான தீர்மானங்களை, கொழும்பு அதிகாரம் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது.

மறுபுறம் தற்போதைய நிதிச் சூழலில் கூட்டு நிர்வாகம் தவிர்க்க முடியாதது என்றாலும், பின்வரும் மாற்றங்கள் அவசியமானவை.

காணியின் உரிமையாளர் என்ற அடிப்படையில், நிர்வாகக் குழுவில் மாநகர சபை சார்பான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

இந்த மையம் வருமானத்தை ஈட்டக்கூடிய சுயசார்பு நிலையை அடையும் போது, அதன் முழுமையான நிர்வாகத்தை மாநகர சபையிடம் ஒப்படைப்பதற்கான சட்டப்பூர்வ ஏற்பாடுகள் இப்போதே செய்யப்பட வேண்டும். இந்த மையத்தின் மூலம் ஈட்டப்படும் வருமானம், மாநகர சபையின் ஒப்புதலுடன், உள்ளூர் மக்களின் கலாசார மேம்பாட்டிற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

சொத்து எமது மாநகரத்தினுடையது. அதிகாரம் மட்டும் ஏன் அந்நியப்பட வேண்டும்? எனவே எமது மாநகரின் சொத்தும் அதிகாரமும் எம்மிடம் இருக்க வேண்டும் என்பதே அவசியம் என்றார்.

முன்மொழிவின் அவசியம் குறித்து சபையின் உறுப்பினர்கள் தமது ஆதரவை முழுமையாக வழங்கியதுடன் பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றினர்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-2268409811114167" crossorigin="anonymous"></script> <ins class="adsbygoogle" style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-2268409811114167" data-ad-slot="7294005735"></ins> <script> (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); </script>