வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழக சட்டசபையில் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தீர்மானம் ஒன்றை முன்மொழிந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, தற்போதைய வடிவில், எப்.சி.ஆர்.ஏ. பதிவு காலாவதியாகுதல், புதுப்பிக்கப்படாமை, புதுப்பிப்பு மறுக்கப்படுதல், பதிவு ரத்து அல்லது ஒப்படைக்கப்படுதல் போன்ற காரணங்களால் தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அரசிடம் ஒப்படைத்தல், நிர்வகித்தல், மாற்றுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான விதிகள் குறித்து இம்மன்றம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது. இவ்விதிகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.
எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப்பெற்று, மாநில அரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்துமாறு மத்திய அரசை இம்மன்றம் வலியுறுத்துகிறது. எந்தவொரு திருத்த மசோதாவும் இயற்கை நீதி, விகிதாசாரம், சொத்துரிமைப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும். வெளிநாட்டு பங்களிப்புகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன், சட்டப்பூர்வமாக செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவ, மத, கலாசார மற்றும் சமூகநல அமைப்புகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது.