சம்பந்தன்,மாவை ஆகியோரின் ”மரண வீடு”களும் ”கர்மா”வும்
Share

இழிவான தமிழர் அரசியலின் பிதாமகன் சுமந்திரனே ஆவார்
”தமிழரசுக்கட்சியின் பெருந் தலைவர் சம்பந்தனின் மரண வீட்டில் இழிவான அரசியல் செய்த சுமந்திரனை அதே தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண வீட்டில் ”கர்மா”தாக்கியுள்ளது. எனவே மரணச்சடங்கையே அரசியலுக்கு பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருக்கின்றது என சுமந்திரன் ஒப்பாரி வைக்க முடியாது .ஏனெனில் அந்த இழிவான அரசியலின் பிதாமகன் சுமந்திரன்”
கே.பாலா
இலங்கை தமிழரசுக்கட்சிக்குள் அனைத்து விடயங்களிலும் இரு துருவங்களாக இருக்கும் சிறீதரன் ,சுமந்திரனுக்கிடையிலான பனிப்போர் அண்மைக்காலமாக நேரடி யுத்தமாக மாறி வருகின்றது.இதில் யுத்தத்தை தொடுப்பவராக சுமந்திரனும் பதிலடித்தாக்குதல் கொடுப்பவராக சிறீதரனும் சளைக்காது போரிடுகின்றனர்.தனது மீள் பாராளுமன்ற பிரவேசத்துக்காகவும் சிறீதரனின் இருப்பை அகற்றுவதற்காகவும் சுமந்திரன் வியூகங்கள் அமைப்பதும் அதனை சிறீதரன் உடைப்பதும் தற்போது தமிழரசுக்கட்சிக்குள் இரு படைப்பிரிவுகளின் பலப் பரீட்சையாக நடந்தேறி வருகின்றது.
இதில் யுத்தத்தை தொடுப்பவரான சுமந்திரன் ஒவ்வொரு தடவையும் சிறீதரனிடம் தோல்விகண்டே வருகின்றார். இதில் இறுதி இரு சமர்களைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளராக பதவியேற்ற பின்னர் எம்.ஏ.சுமந்திரன் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் ”பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளினடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலே எங்களுடைய கட்சியிலே இரண்டாவது இடத்திலே நான் இருக்கிறேன். எங்களுடைய கட்சிக்கு இந்த தடவை ஒரு ஆசனம் கிடைத்த காரணத்தால் மட்டும் தான் நான் பாராளுமன்றத்தில் பிரதிநிதியாக முடியவில்லை. இரண்டு ஆசனங்கள் கிடைத்திருந்தால் நானும் பாராளுமன்றத்தில் இருந்திருப்பேன்.
இந்த தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது இடத்தை பெற்ற சிவஞானம் சிறீதரன் ஏதாவது காரணத்துக்காக எம்.பி. பதவியிலிருந்து விலகுவாராக இருந்தால் தானாகவே, எவரும் எதுவும் சொல்லாமலே நான் பாராளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எந்தத் தவறும் கிடையாது.விருப்பு வாக்கு அடிப்படையிலே நான் இரண்டாம் இடத்தில் இருக்கிறேன்.எங்கள் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல்கள் வருகின்றது என சிறீதரன் சுட்டிக்காட்டியிருந்தார். முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது தொடர்பாக அவர் நேரடியாக சொல்லவில்லை. ஆனால் மாகாண சபை தேர்தல் வருகிறது. அந்த வகையில் சில மாற்றங்கள் நிகழலாம். சுமந்திரன் அந்த பதவிக்கு வரலாம் என்றும் சொல்லி இருந்தார். அதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.
வாக்குகள் அடிப்படையில் மாவட்டத்தில் அடுத்த இடத்தில் இருப்பவருக்கு எந்த வேளையும் பாராளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய ஒரு தேவை ஏற்படலாம். அப்படி வந்தால் பாராளுமன்ற உறுப்பினராக நான் வருவேன். அதற்கு எனக்கு மறுப்பு கிடையாது. தற்போது இருக்கிற சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தலிலே தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கிற சூழலில் தேசிய பட்டியல் மூலமாக செல்வது முறையற்றது என்பது என்னுடைய நீண்டகால நிலைப்பாடு என்று கூறியிருந்தார்.
”சிறீதரன் ஏதாவது காரணத்துக்காக எம்.பி. பதவியிலிருந்து விலகுவாராக இருந்தால் தானாகவே, எவரும் எதுவும் சொல்லாமலே நான் பாராளுமன்ற உறுப்பினராக வருவேன்” என்ற சுமந்திரனின் கூற்றால் சிறீதரனின் உயிருக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கைகள் அரசியல் ஆய்வாளர்கள் மத்தியிலிருந்து வெளிக்கிளம்பிய நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை என சிறீதரன் பகிரங்கமாகக்கூறி சுமந்திரனின் மீள் பாராளுமன்ற பிரவேசத்துக்கான திட்டத்தை, ஆசையை தகர்த்து விட்டார்
மாகாண சபை தேர்தல் நடத்துவதாக இருந்தால் தேர்தல் திருத்தம் முதலில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.முன்னாள் எம்.பி சுமந்திரனால் தனிநபர் பிரேரணைகூட கொண்டுவரப்பட்டிருந்தது. ஆனால் 50வீதம் தொகுதி மற்றும் விகிதாசார முறைக்கு தென்னிலங்கையிலும் கடும் எதிர்ப்பு வந்தது.நாங்களும் அதற்கு எதிர்ப்பு இவ்வாறான இழுபறியில் மாகாண சபை தேர்தல் உள்ளது. இவ்வாறானதொரு சூழ் நிலையில் மாகாண சபை தேர்தல் நடந்தால் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு நன் தயாரில்லை.
கட்சி வழக்கு நிலுவையில் உள்ளது. கட்சியில் உள்ளவர்களே வழக்கினைத் தாக்கல் செய்திருக்கின்றனர். தாயினை நீதிமன்றத்தில் வைத்துக்கொண்டு தாயிடம் உணவு கேட்பது .பால் அருந்த போகின்றோம் என்று சொல்வது போலுள்ளது நாம் செய்வது இனவிடுதலைக்கான அரசியல். பதவிகளுக்கான அரசியல் அல்ல பதவிகளுக்கு அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும்.இவ்வாறான சூழல் இருக்கும் போது நான் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் இல்லை என்று கூறி சுமந்திரனின் எம்.பி.பதவி கருத்துக்கு சுமந்திரனை வைத்தே சிறீதரன் பதிலடி கொடுத்து விட்டார்.
இதனால் ஏமாற்றமும் விசனமுமடைந்த சுமந்திரன் மீண்டும் ஒரு வியூகத்தை அமைத்து ”மரணவீட்டில் அரசியல் செய்யும் இழிவானவர்கள்” என்ற பிரசாரப் போரை சிறீதரன் மீதும் அவரை ஆதரிப்போர் மீதும் தொடுத்துள்ளார். சுமந்திரன் தனது வியூகங்களுக்கு ஊடகங்களைப் பயன்படுத்துவதே வழமை.அதேபோன்றே தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரணவீட்டில் தனது அணியினருக்கு காட்டப்பட்ட ”துரோகிகள்”என்ற எதிர்ப்பை வைத்துக்கொண்டு சிறீதரனுக்கு எதிரான அடுத்த வியூகத்தை அமைத்து அதனூடாக பிரசாரப்போரையும் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணல் மூலமே சுமந்திரன் தொடுத்தார்.
சுமந்திரன் அந்த நேர்காணலில் ”மாவை சேனாதிராஜா சுகவீனமடைந்ததும் அவரை நான் வைத்தியசாலையில் பார்வையிட்டேன்.பின்னர் அவரின் மரணச் செய்தி அறிந்ததும் நேரடியாக அவரின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினேன்.அவரது குடும்பத்தினருடன் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக உரையாடினேன். ஆனால் எனக்கு பின்னர் சென்றவர்கள் தவறாக நடத்தப்பட்டார்கள்.மாவை சேனாதிராஜாவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்ட குலநாயகம் அங்கு முழுமையாகவே செல்ல முடியாத நிலைமை இருந்தது.
மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்கில் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று நான் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களுடன் பதாகைகளைக் கட்டினார்கள் நாங்கள் அங்கு சென்றால் குழப்பங்களை ஏற்படுத்த குண்டர்களும் தயார் நிலையில் இருந்தார்கள் .ஆகவே மறைந்த தலைவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்று அங்கு சலசலப்பு ஏற்பட்டால் அது மாவை சேனாதிராஜாவுக்கு அகௌரவத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடும் என்பதனால் ஒதுங்கியிருந்தேன்.அதுமட்டுமன்றி மரணச்சடங்கில் அரசியல் செய்யும் மிக மோசமான நிலைமை இருந்தது ,இந்த நிலைமைக்கு வெளியில் இருப்பவர்களும் எமது கட்சியில் சிலரும் காரணமாக இருக்கின்றார்கள் என்பது மிக மோசமான விடயம்.
நான் உள்ளிட்டவர்களின் பங்கேற்பின்மையை பெரு வெற்றியாக கொண்டாடுபவர்கள் இன்னும் கட்சிக்குள் இருக்கின்றார்கள் .மரணச்சடங்கையே அரசியலுக்கு பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருந்தால் அந்த அணியுடன் எப்படி நான் உள்ளிட்டவர்கள் இணைந்து செல்ல முடியும்?எனவே இந்த வேறுபாடுகள்தான் தமிழரசுக்கட்சிக்குள் இரு அணிகளாக தெரிகின்றன.இந்த விடயம் தொடர்பாக நாம் ஒழுக்காற்று நடவடிக்கைகளை விரைவில் எடுப்போம் கட்சித்தலைவர் தற்போது பொலிஸில் முறைப்பாட்டை செய்துள்ளார். விசாரணைகள் நடைபெறுகின்றன விரைவில் இதன் சூத்திரதாரிகள் வெளிப்படுத்தப்படுவார்கள்”என்று கூறியிருந்தார்
மரணச்சடங்கில் அரசியல் செய்யும் மிக மோசமான நிலைமை இருந்தது ,இந்த நிலைமைக்கு வெளியில் இருப்பவர்களும் எமது கட்சியில் சிலரும் காரணமாக இருக்கின்றார்கள் என்பது மிக மோசமான விடயம்.மரணச்சடங்கையே அரசியலுக்கு பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருந்தால் அந்த அணியுடன் எப்படி நான் உள்ளிட்டவர்கள் இணைந்து செல்ல முடியும்?என்பது சுமந்திரனின் கேள்வி. அது நியாயமானதுதான் .ஆனால் இதுதான் ”கர்மா” என்பது சுமந்திரனுக்கு தெரியவில்லையா அல்லது தெரிந்தும் தெரியாதவர் போல் நடிக்கின்றாரா என்பதே கேள்வி.
மரணச்சடங்கையே அரசியலுக்கு பயன்படுத்துகின்ற இழிவான அரசியலை முதலில் தமிழரசுக்கட்சிக்குள் ஆரம்பித்தவர் சுமந்திரன்.தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் மரணமடைந்த நிலையில் சம்பந்தனின் மரண வீட்டை அரசியலாக்கி சம்பந்தனின் மரணவீட்டில் சிறீதரன் அணியினரை கிட்ட நெருங்கவிடாது,சாணக்கியன். சயந்தன் என்ற இரு விசுவாசிகளை வைத்துக்கொண்டு சம்பந்தனின் மரணத்தை, மரணவீட்டை ,இறுதி ஊர்வலத்தை தனது இழிவான அரசியலுக்கு பயன்படுத்தியவர் சுமந்திரன்.
சம்பந்தனின் உயிர் பிரிந்தவுடனேயே சுமந்திரன் அணி சம்பந்தனின் இறுதிக்கிரியை தொடர்பான அனைத்து விடயங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது தமிழரசுக்கட்சியினரிலேயே பெருமளவானோருக்கு தெரிந்திருக்கவில்லை. சம்பந்தனின் மரணச்சடங்கில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இன்னொரு அணியான சிறீதரனின் வகிபாகம் இருந்துவிடக்கூடாது என்பதில் தீவிர கவனம் எடுத்த சுமந்திரன் அணி சம்பந்தனின் உடல் அக்கினியுடன் சங்கமமாகும் வரை சம்பந்தனின் உடலுடன் சங்கமித்தே இருந்தனர். இதனால் இலங்கை தமிழரசுக்கட்சியின் அப்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா ,சிறீதரன் முதல் தமிழரசுக்கட்சியின் உண்மையான விசுவாசிகள் வரை வெறும் பார்வையாளர்களாக வந்து சம்பந்தனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவேண்டிய நிலைமையை இந்த அணி ஏற்படுத்தியிருந்தது.
சம்பந்தனின் பூதவுடல் கொழும்பு பொரளை மலர்ச் சாலையிலும் பின்னர் பாராளுமன்றத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அவரது சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்ல முன்னர் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் சிறீதரனால் சுமந்திரன் அணியிடம் விடுக்கப்பட்டு முதலில் அது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் சிறீதரனால் ”சம்பந்தனின் உடல் கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்” என்ற செய்தி ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் திடீரென சிறீதரனின் இந்த வேண்டுகோளை நிராகரித்த சுமந்திரன் அணி ,சம்பந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவரங்கத்தில் மட்டுமே அஞ்சலிக்காக வைக்கப்படும் என்ற அறிவிப்பை விடுத்தது. அவ்வாறானால் சம்பந்தனின் உடலை தரை வழியாக யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது தமிழர் பகுதிகளில் மக்கள் அவருக்கு வழி நெடுகிலும் அஞ்சலி செலுத்தக்கூடியதாக இருக்கும் என்ற வேண்டுகோளை சிறீதரன் தரப்பு விடுத்தபோதும் அதனையும் நிராகரித்த சுமந்திரன் அணி சம்பந்தனின் உடலை விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று அஞ்சலிக்கு வைத்து விட்டு பின்னர் அங்கிருந்து விமானம் மூலமே திருகோணமலைக்கும் எடுத்துச் சென்றது.
இவ்வாறு சிறீதரன் அணியினரை சம்பந்தனின் இறுதிக்கிரியை காரியத்தில் நெருங்கவிடாது பார்த்துக் கொண்ட சுமந்திரனுக்குத்தான் தரும்போது தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண வீட்டில் சிறீதரனுக்கு ஏற்பட்ட அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. மரணச்சடங்கையே அரசியலுக்கு பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருந்தால் அந்த அணியுடன் எப்படி நான் உள்ளிட்டவர்கள் இணைந்து செல்ல முடியும்?எனக்கேள்வி எழுப்பும் சுமந்திரன் தான் அந்த இழிவான அரசியலின் ஆரம்ப கர்த்தா.ஆனால் அவரைப் பொறுத்தவரையில் ”மற்றவர்களுக்கு வந்தால் அதுதக்காளி சட்னி தனக்கு வந்தால் அது இரத்தம்”என்ற சித்தாந்தமேயுள்ளது. ஆகவே மற்றயவர்களுக்கு ஒரு விரலை நீட்டி குற்றம்சாட்டும்போது ஏனைய நான்கு விரல்களும் தன்னை நோக்கியிருப்பதை சுமந்திரன் மறந்து விடக்கூடாது.
ஆக தமிழரசுக்கட்சியின் பெருந்தலைவர் .சம்பந்தனின் மரண வீட்டில் இழிவான அரசியல் செய்த சுமந்திரனை அதே தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மரண வீட்டில் ”கர்மா”தாக்கியுள்ளது. எனவே மரணச்சடங்கையே அரசியலுக்கு பயன்படுத்துகின்ற இழிவான அணியொன்று கட்சிக்குள் இருக்கின்றது என சுமந்திரன் ஒப்பாரி வைக்க முடியாது .ஏனெனில் அந்த இழிவான அரசியலின் பிதாமகன் சுமந்திரன். ”கர்மா” அல்லது ”வினைப்பயன்” என்பது ஒருவரின் தற்போதைய மற்றும் முந்தைய ஜென்மத்தில் செய்த செயல்களின் கூட்டுத்தொகையாகும், இது எதிர்கால இருப்பில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கிறது.இதுதான் தற்போது சுமந்திரனுக்கும் நடந்து வருகின்றது