LOADING

Type to search

உலக அரசியல்

ஏமனில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் – 53 பேர் உயிரிழப்பு

Share

ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனா மற்றும் சவுதி அரேபியா எல்லையருகே அமைந்த கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்த சாடா மாகாணம் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஏமனில் இருந்து இந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் செங்கடல் பகுதியில் அமெரிக்க கப்பல்களை வழிமறித்து தாக்குதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிற நாடுகளின் கப்பல்கள், விமானம் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு எதிராக சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு எதிராக கடற்கொள்ளை, வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும், ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். தீர்க்கம் நிறைந்த மற்றும் சக்தி வாய்ந்த நடவடிக்கைகளை எடுக்கும்படி டிரம்ப் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, விமானந்தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் புறப்பட்டு சென்றன. ஏமனில் நடந்த வான்வழி தாக்குதலில் 24 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி ஹவுதி அமைப்பால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம்  வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட இதுவரை 53 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் கட்டுக்குள் கொண்டு வரும்படி ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் அன்டானியோ குட்டெரஸ் கூறியுள்ளார்.