காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்; ஹமாஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு
Share

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த போரில் காசா முனையில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேவேளை, பணய கைதிகளில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், ராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பணய கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த சில வாரங்களாக போர் நிறுத்தம் அமலில் இருந்தது. அதேவேளை, ஹமாஸ் ஆயுதக்குழுவின் பிடியில் 59 பேர் பணய கைதிகளாக உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காசா முனையின் கான் யூனிஸ், ரபா உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசாவின் கான் யூனிசில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த தலைவர் சலாஹ் அல் பர்தாவில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட சலாஹ் அல் பர்தாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு மூத்த தலைவராக செயல்பட்டு வந்தார். கான் யூசில் உள்ள முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சலாஹ்வின் மனைவியும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.