விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்
Share

தவெக தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கப்பட்டு இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கிடையே 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தேர்தல் பணிகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். தேர்தலை முன்னிட்டு பல்வேறு பொது இடங்களுக்கு அவர் பயணம் செய்யவிருக்கிறார். இதனிடையே, விஜய்க்கு சமூக ஊடகங்களில் அச்சுறுத்தல் எழுந்த நிலையில், அவரின் பாதுகாப்பு கருதி ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி விஜய்க்கு 8 முதல்11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர். தற்போது வெளிநாட்டு பவுன்சர்கள் விஜய்யின் பொது நிகழ்ச்சிகளில் அவருக்கான பாதுகாப்பை உறுதி செய்து வரும் நிலையில், இனி மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை கமாண்டோக்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் விஜய் இருப்பார்.