அ.தி.மு.க, பா.ஜ.க. கூட்டணியை விமர்சித்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் – ஆர்.பி.உதயகுமார்
Share

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் ஒரு சரித்திரம் படைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி கூட்டணியை எடப்பாடியார் என்கிற ஒரு சாமானியர் அமர்த்தியுள்ளார். இதைக் கண்டு நடுநடுங்கி போயிருக்கிறது ஆளும் தி.மு.க. அரசு. தங்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு எள்முனை அளவும் சேவை செய்யாத காரணத்தினாலே, தங்களுடைய அதிகார துஷ்பிரேகத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் மீண்டும் ஆட்சியை தொடரலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்த ஸ்டாலினுக்கு தற்போது தலையில் இடி விழுந்தது போல உள்ளது. இந்த அறிவிப்பை இன்றைக்கு நாடு முழுவதும் வரவேற்றுக் கொண்டிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஸ்டாலின் கையில் இருக்கிற உளவுத்துறை கொடுத்திருக்கிற அறிக்கை இனி தி.மு.க.வின் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருக்கிறது என்கிற அந்த நடுக்கத்தில், அச்சத்திலே உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிற ஸ்டாலினின் அறிக்கையை யாரும் பொருட்படுத்த தயாராக இல்லை. அ.தி.மு.க. தலைமையிலான வெற்றி கூட்டணியை பொறுத்துக்கொள்ள முடியாமல், எடப்பாடி யாரை குறைத்து மதிப்பிட்டவர்கள் எல்லாம் நெஞ்சடைத்து போய், வாயடைத்து போய் உள்ளனர். தமிழக மக்களுக்காக உருவாக்கி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி இந்த ஊழல் சாம்ராஜ்யத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இருக்கிறது. அ.தி.மு.க. தலைமையில் உருவாகி இருக்கிற இந்த வெற்றி கூட்டணி மூலமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் இந்திய திருநாட்டில் தலை குனிந்து நிற்பதை பட்டியிலிட்டு உள்ளார். டாஸ்மாக் ரூ.39 ஆயிரம் கோடிக்கு ஊழல் நடைபெற்றது என்றும் சொன்னார். தமிழகத்திலே பாலாறு, தேனாறு ஓடும் என்று சொன்ன ஸ்டாலினே உங்கள் ஆட்சியிலே இன்றைக்கு சாராய ஆறு தான் ஓடுகிறது. பாரத பிரதமர் இங்கே பாம்பன் பாலத்தை திறக்க வருகிற போது மூன்று மடங்கு நிதி கொடுத்திருக்கிறோம் என்று சொல்லுகிறார். ஆனால் பணமே வரவில்லை என்று 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூட நிதி தராமல் நீலிக் கண்ணீர் வடித்து வருகிறார் ஸ்டாலின். நிச்சயம் அ.தி.மு.க. சட்ட சபையில் ஆளுகிற வரிசையில் உட்கார்ந்து எடப்பாடியார் முதலமைச்சராக இருந்து இந்த நாட்டு மக்களுக்கு திட்டங்களை வழங்குகிற அந்த நாள் தொலைவில் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் மீது இடியாக இறங்கிய மின்சார கட்டண உயர்வு, தமிழ்நாட்டு மக்கள் மீது இடியாக இறங்கி இருக்கிற சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் என்று ஆயிரம் இடியை தமிழக மக்களுக்கு அவர் வாடிக்கையாக வைத்திருக்க ஸ்டாலினுக்கு இந்தக் கூட்டணி என்பது தலையில் இடியாய் விழுந்திருக்கிறது. இந்த கூட்டணியை குறித்து நீங்கள் தொடர்ந்து அவதூறாக பேசுகிறீர்கள் என்று சொன்னால் எடப்பாடியார் ஆணை பெற்று தமிழகம் முழுவதும் கழக அம்மா பேரவை சார்பில் நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தயங்க மாட்டோம். ஆகவே ஆரோக்கியமான விமர்சனம் மூலம் ஒரு கூட்டணி அமைகிறது என்று சொன்னால் அதை ஆரோக்கியமாக விமர்சிக்க வேண்டுமே தவிர, இது போன்ற அரசியல் நாகரிகம் இல்லாமல் வார்த்தைகளை பயன்படுத்துவது தமிழ் நாட்டு அரசியலுக்கு உகந்த தல்ல. நீங்கள் பாஜக கட்சியில் கூட்டணி அமைத்து மத்தியிலே எத்தனை அமைச்சரவைகளை பெற்றீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. உங்களுக்கு மறதி நோய் வந்திருந்தால் அதற்கு தமிழ்நாட்டு மக்கள் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஆரோக்கியமான கூட்டணி, தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கிற கூட்டணி, தமிழ்நாட்டு மக்களை வளர்ச்சி நோக்கி அழைத்துச் செல்கிற கூட்டணியை எடப்பாடியாரின் தலைமையிலே அமைந்திருக்கிறது. இனி இந்த கூட்டணி வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலே சரித்திரம் படைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.