LOADING

Type to search

கதிரோட்டடம்

மீண்டும் ஒரு தடவை தனது மதவெறியை நிரூபித்துக் காட்டிய நரேந்திர மோடி

Share

பொருளாதார வல்லுனர்களால் மிகுந்த அவதானிப்போடு தயாரிக்கப்பெற்ற பல வகையான புள்ளி விபரங்களின் படி இந்தியா என்னும் இந்துத்துவ தேசத்தில் பிரிவினைகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகின்றது. இந்து மதத்திற்கு முக்கியத்துவம் வழங்;கப்படுவதை ஐம்பது வீதத்திற்கும் அதிகமான இந்திய இந்துக்களே விரும்பவில்லை என்றும் கணிப்புக்களின் ஆதாரத்தோடும் தெரிவிக்கப்படுகின்றது. பாபர் மசூதி தகர்க்கப்பட்டதற்கு, இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் மாத்திரம் அதிர்ச்சியடையவில்லை. இந்துக்களும் தான் கலங்கினார்கள்.

இந்தியப் பொருளாதாரம் சரிந்து செல்கின்றது என்று மேற்படி பொருளாதார வல்லுனர்கள் அடித்துக் கூறுகின்றார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கின்றது. வங்கிகள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் நஸ்டம் காரணமாக ‘கதவுகளை’ நிரந்தரமாக மூடுவதற்கு தயாராக உள்ளதாகவும் அறிக்கைகள் மூலமாக அறிவிப்புக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஏழைகள் வறுமை காரணமாக உயிர்களை துறக்கின்றார்கள். விவசாயிகள் பல்வேறு இயற்கை அழிவுகளாலும், அரசாங்கத்தின் புதிய ‘வேளாண்’ சட்டங்களாலும், தங்கள் இருப்பு தகர்க்கப்பட்டுவிடும் என்று அஞ்சி வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளார்கள்

இவ்வாறு பல நெருக்கடிகள் இந்தியாவை நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கையில், இந்தியாவின் புதிய பாராளுமன்றக் கட்டடத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, “புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதால் இன்று ஒரு வரலாற்று நாள். நாடாளுமன்றத்தின் இந்த புதிய கட்டிடத்தை இந்திய மக்கள் அனைவரும் இணைந்து கட்டுவோம், இந்திய ஜனநாயக வரலாற்றில் இது முக்கியமான நாள், புதிய இந்தியாவின் புதிய அடையாளம்தான் இந்த நாடாளுமன்ற கட்டிடம்,,” என்றெல்லாம் பொய்யான புகழுரைகளை எடுத்து விளாசினார்

தொடர்ந்தும் அவர் வார்த்தைகளை அழகாக அடுக்கி மக்களையும் மந்திரிகளையும் ஈர்ப்பதற்காக இன்னும் பேசிக்கொண்டே போனார்;

“நாடாளுமன்றம் கற்களாலும், தூண்களாலும் கட்டப்படுவதில்லை. அது ஜனநாயகத்தை உருவகப்படுத்துகிறது. அரசியல் பொருளாதார, சமூக சமத்துவத்தை உணர்த்துகிறது.;, குழுவாக இணைந்து பணியாற்றுபவர்களுக்கான அடையாளம் இந்த புதிய பாராளுமன்றக் கட்டடம் என்றார் பிரதமர்.

ஆனால் இந்த உயர்ந்த மதிப்புகளை எல்லாம் மிதித்து நசுக்கிவிட்டுக் உணவு வழங்கும் விவசாயிகள் தங்கள் உரிமைகளுக்காகக் கடந்த 16 நாட்களாகச் சாலையில் போராடி வருகிறார்களே, அவர்களை பிரதமர் மோடி திரும்பிப் பார்க்கவில்லை. அமைச்சர்களை அனுப்பி பேச்சுக்களை நடத்தி, ‘சமாளித்து’ அனுப்பும்படி பணித்துள்ளாராம். மறுபக்கத்தில் இராணுவத்தையும் பொலிசையும் அனுப்பி அந்த உழைக்கும் விவசாயிகளை உதைத்து தள்ளுகின்றார் பிரதமர் மோடி.

ஆனால், பொதுநலத்துடன் மக்களுக்குச் சேவையாற்றுவதுதான் ஜனாநாயகத்தின் முதற்படி என்பதையும் மறந்து மோடி மக்களின் பணத்தை வீணடிக்கின்றார் என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

மறுபுறத்தில் தனது அமைச்சர்களை ஏவி விட்டு “விவசாயிகளின் போராட்டத்திற்குப் பின்னால் பாகிஸ்தானும் சீனாவும் உள்ளன என்று போருக்கான அறைகூவலை கபடத்தனமாக எழுப்புகின்றார். போர் ஒன்று மூண்டால் மோடியின் உயிரா போகப்போகின்றது. ஏழைச் சிப்பாய்கள் போர்க்களத்தில் மடிய அவர்கள் குடும்பத்தினரே அனாதைகளாவார்கள்.

அதற்கு மேலாக, ‘நேற்று நடைபெற்ற ‘அடிக்கல்’ நாட்டு விழாவில் இந்து மத குருமார்களை மாத்திரம் அழைத்து மந்திரங்கள் ஓதி தன்னை ஒரு இந்துத்துவத்தின் தலைவனாகவும், இந்தியாவை இந்து வலலரசாகவும் காட்டி, அந்நாட்டில் வாழும் எத்தனையோ இலட்ச இஸ்லாமியர்களையும், கிறிஸ்த்தவர்களையும் புறக்கணித்துள்ளதோடு, தனது மதவெறியையும் மீண்டும் ஒரு தடவை நிரூபித்தும் காட்டியுள்ளார் மோடி. இலங்கையில் கூட அரச வைபவங்களுக்கு பௌத்த பீடங்களின் தலைவர்களோடு, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ மதத் தலைவர்களையும் அழைத்து பிரார்த்தனை செய்யவதற்கு வாய்ப்புக்களை வழங்குகின்றார்கள் என்பதையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.