LOADING

Type to search

மலேசிய அரசியல்

மலேசிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 63 -ஆம் ஆண்டை எட்டுகிறது

Share

முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து

-மலேசியா- நக்கீரன்

கோலாலம்பூர், மே 14:

நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தோட்டப் பாட்டாளிகளின் நலம் கருதி 1960 மேத் திங்கள் 14-ஆம் நாளில் உருவாக்கப்பட்டதுதான் மலேசிய இந்தியர்களின், குறிப்பாக தமிழர்களின் பெருமையை பறைசாற்றும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் என்று மலாயாப் பல்கலைக்கழக தமிழாய்வுப் பிரிவின் தலைவர் முனைவர் மணிமாறன் தெரிவிக்கிறார்.

இந்தக் கூட்டுறவு சங்கத்திற்கு நல்லாரும் வல்லாருமாகிய டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள் தலைமை வகிப்பது முதல் சிறப்பு. அவரின் சிந்தனைக்கேற்ற செயல்மறவாகத் திகழ்பவரும் கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குநருமான டத்தோ பா.சகாதேவன் அவர்கள் அடுத்தச் சிறப்பு.

இதன் முதல்(ஸ்தாபக) தலைவராக துன் வீ.தி.சம்பந்தனும் துணைத் தலைவராக டான்ஸ்ரீ ப.மாணிக்கவாசகமும் செயலாளராக கோவிந்தசாமியும் பொறுப்பு ஏற்றிருந்த தருணத்தில் கூட்டுறவு சங்கம் முதன்முதலில் புக்கிட் சீடிம் தோட்டத்தை வாங்கியபோதே அதற்கு அடித்தளமாக விளங்கியவர் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமசுந்தரம் அவர்கள்.

தொடக்கத்தில் தடுமாற்றம் கண்டாலும், தற்பொழுது நாட்டில் உள்ள கூட்டுறவு அமைப்புகளுக்கே முன்மாதிரியாக இவ்வமைப்பு திகழ்கின்றது.

ஒரு கூட்டுறவு சங்கம் என்ற அடிப்படையில் தன்னுடைய உறுப்பினர்களுக்கு ஏராளமான சமூக நலச் சலுகையுடன் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கல்வி அனுகூலத்தை அள்ளி வழங்குவதுடன், இந்த நாட்டில் தமிழ் வளர்ச்சியையும் தமிழ் எழுத்தாளர்களின் ஊக்குவிப்பையும் இலக்காகக் கொண்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியப் போட்டியையும் தொய்வின்றி நடத்தி வருகிறது இச்சங்கம்.

அத்துடன் கடந்த பத்து ஆண்டுகளாக ஈராண்டுகளுக்கு ஒரு முறை, பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர் பரிசு அளிக்கப்படுகிறது. தமிழ் இலக்கியப் போட்டியைப் பொறுத்தமட்டில், உலக அளவில் இதுதான் அதிகமான பரிசுத் தொகையைக் கொண்டது. கொரோனா தாக்கத்தினால் உலகமே தேக்கம் கண்டிருந்தபோதும் 2020-இல் 5-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியை நிகழ்த்திவிட்டு, இப்போது 6-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறது தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்.

இதற்காக, வெ.10 கோடி முதலீட்டுடன் டான்ஸ்ரீ சோமா மொழி-இலக்கிய அறவாரியம் என்ற பெயரில் தனி அறவாரியம் அமைத்திருப்பது இன்னும் சிறப்பு.

பன்னாட்டுப் புத்தகப் பரிசுப் போட்டியில் தொடர்ந்து வெளிநாடுவாழ் தமிழர்கள் வெற்றிபெறும் சூழல் எழலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டு எழுத்தாளர்களும் பயனடையும் வண்ணம், பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டிடன் மலேசியப் புத்தகப் பரிசுப் போட்டியையும் இணைத்து இந்த அறவாரியம் நடத்துகிறது. இரு போட்டிகளிலும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் பங்கு கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படுவது, இந்த நாட்டில் தமிழ் வளர்犀利士
ச்சிக்காக கூட்டுறவு சங்கம் எந்த அளவுக்கு பாடாற்றுகிறது என்பதற்கு இவை யாவும் தக்க சான்றாகும்.

அதைப்போல மலேசிய இந்தியர்களின் கலை-பண்பாட்டு-இசைத் துறை வளரவும் அதற்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள டான்ஸ்ரீ கே.ஆர். சோமா கலை பண்பாட்டு வாரியத்தின் மூலம் நாட்டிய, நாடக, இசைக் கலை வளர்ச்சி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வருகிறது இந்தச் சங்கம்.

இத்தனைப் பெரிய அளவில் அருந்தொண்டாற்றி வரும் கூட்டுறவு சங்கத்தைப் பெற்றிருப்பதற்கு மலேசிய இந்திய சமுதாயம், குறிப்பாக, தமிழ்க் குலம் எஞ்ஞான்றும் நன்றி பாராட்ட வேண்டும் என்று தெரிவித்த முனைவர் மணிமாறன், அண்மையில்கூட மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் பிரிவில் உயர்க்கல்வி மேற்கொள்ளும் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி செய்த உதவிக்கு மாணவர்களின் சார்பிலும் துறை சார்பிலும் கூட்டுறவு சங்கத் தலைவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்களுக்கும் அதன் நிருவாகச் செயலாளர் டத்தோ பா.சகாதேவன் அவர்களுக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிப்பதாகவும் சொன்னார்.

தோட்டப் பாட்டாளிகளின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கத்தின் தலைவராக டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் அவர்கள் வாய்த்தது, மலேசியத் தமிழ்மக்கள் பெற்ற பெரும்பேறு என்று முன்னாள் துணை அமைச்சரும் மஇகா பேராக் மாநிலத் தலைவரும் கூட்டுறவு சங்க மொழி-இலக்கிய அறங்காவலர்களில் ஒருவருமான டான்ஸ்ரீ க.குமரன் தெரிவித்தார்.

கல்வியில் உலக அளவில் புகழ்பெற்ற ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைந்தபோது, அதற்காக அரும்பாடாற்றிய அமெரிக்கவாழ் தமிழ்ப் பற்றாளர்கள்-தமிழக அரசுடன் சேர்ந்து கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் கொடை அளித்தவர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமசுந்தரம் என்று டான்ஸ்ரீ குமரன் நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு கல்வி, இலக்கியம், கலை, ஆன்மிகம் என்றெல்லாம் கடமையாற்றிவரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், இந்த நாட்டில் முதன் முறையாக வீட்டுடைமைத் திட்டத்தை உருவாக்கியது என்பது இன்னும் குறிப்பிடத்தக்கது.

கூட்டுறவு சங்கம் முதன் முதலில் வாங்கிய புக்கிட் சீடிம் தோட்டத்தில் தன் சொந்த பாட்டாளிகளின் நலனை கருத்திற் கொண்டு மலிவான விலையில் நடைமுறைப்படுத்திய இந்த வீட்டுடமைத் திட்டம்தான் நாட்டில் உருவான முதல் வீட்டுடைமைத் திட்டமாகும். அரசாங்கத்திற்கே முன்மாதிரியாகப் பார்க்கப்பட்டது இந்த வீட்டுடைத் திட்டம்.

61 ஆயிரத்திற்கும் அதிகமான அங்கத்தினர்களைக் கொண்டுள்ள கூட்டுறவு சங்கம், தான் அடையும் உபரி இலாபத்தை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிப்பதை முக்கியக் கடமையாகக் கொண்டுள்ளது.

கூட்டுறவு சங்க முதல் தலைவர், துன் வீ.தி.சம்பந்தன் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடிவரும் கூட்டுறவு சங்கம், அதை கல்வி மறுமலர்ச்சிக்கு உரிய விழாவாக அனுசரித்து வருகிறது. அதன் அடிப்படையில், மலேசியக் கல்விச் சான்றிதழ்(எஸ்பிஎம்), மலேசிய உயர்க் கல்விச் சான்றிதழ்(எஸ்டிபிஎம்) தேர்வுகளில் சிறந்த அடைவு நிலையுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதியுடன் தங்கப் பதக்கமும் வழங்கி சிறப்பித்து வருகிறது.

ஒரு கூட்டுறவு சங்கம் தன்னையும் செம்மையாக நிலைநிருத்திக் கொண்டு, இப்படி யெல்லாம் இலக்கியப் பணி, கல்விப் பணி, கலை வளர்ச்சி, சமூகப் பணி என்று செயல்பட முடிகிறது என்றால், அதற்கெல்லாம் இந்த சங்கத்திற்கு வாய்த்த தகுதிசால் தலைமைதான் காரணம் என்பதில் கடுகளவும் மிகையில்லை என்று குமரன் குறிப்பிடுகிறார்.

இந்த நாட்டின் மையப் பகுதியான கிள்ளான் பள்ளத்தாக்கில் நடைபெறும் பெரும்பாலான இலக்கிய நிகழ்ச்சிகளுக்கும் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் அல்லது இலவசமாக துன் சம்பந்தன் மாளிகையில் அமைந்துள்ள டான்ஸ்ரீ டத்தோ கே.ஆர். சோமா அரங்கத்தை வழங்கி, நிகழ்ச்சிப் படைப்பாளர்களுக்கு உற்றுழி உதவி வருவது கூட்டுறவு சங்கத்தின் இன்னொரு சிறப்பு.

இவற்றுக்கும் மேலாக, ஆயிரக் கணக்கான மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை அளித்துவரும் இந்தச் சங்கம் ஒரு வேலை வாய்ப்பு மையமாகவும் விளங்குகிறது.

இந்த நாட்டில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட உயரமான ஒரேக் கட்டடத்தைக் கொண்டிருப்பதுடன் இந்திய சமுதாயத்தின் பெருமையைப் பறைசாற்றுவதும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம்தான்.

தொழில்முனைவர்களுக்கு அவர்களின் தகுதி, அடைமான சொத்து ஆகியவற்றின் அடிப்படையில் 5 ஆயிரம் முதல் 5 இலட்ச வெள்ளி வரை 6 சதவீத வட்டியுடன் கடன் வசதியும் வழங்கப்படுகிறது.

அதைப்போல தன் உறுப்பினர்கள் வீட்டுடைமையாளராக உருமாற வேண்டும் என்னும் பரந்த நோக்கில், முதல் முறையாக வீடு வாங்க முனைவோருக்கு 4.55 சதவிகித வட்டியுடன் தகுதிக்கேற்ப 3 இலட்ச வெள்ளிவரை கடன் வசதியும் அளிக்கப்படுகிறது. உறுப்பினர்களின் பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்கு ஆளானால், அவர்களின் கல்விச் செலவிற்காக 18 வயது வரை மாதந்தோறும் 1,000 வெள்ளி அளவிற்கு கூட்டுறவு சங்கம் வழங்குகிறது.

இவற்றுக்கிடையே, ஆன்மிக சேவையையும் மேற்கொள்வது, கூட்டுறவு சங்கத்தின் இன்னொரு சிறப்பு. கூட்டுறவு சங்க நிர்வாகத்தின்கீழ் உள்ள தோட்டங்களில் ஆலயங்கள் உருவாக்கப்பட்டு, அந்தந்தத் தோட்டங்களில் வாழும் பாட்டாளுக்கான ஆன்மிக பணியை கூட்டுறவு சங்கம் ஆற்றி வருகிறது என்று 2022 மே 14-இல் கூட்டுறவு சங்கம் 63-ஆவது ஆண்டை எட்டுவதன் தொடர்பில் டான்ஸ்ரீ க.குமரன் தன் எண்ண வோட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.

நக்கீரன் – Nakkeeran 013-244 36 24