LOADING

Type to search

இலங்கை அரசியல்

நீதிபதி மா.இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு!

Share

கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம் பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது குறித்த அங்கு கலந்து கொண்டவர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மறுநாள் 29 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத கடவையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த சடலம் தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதையடுத்து முதலாம் சந்தேக நபரான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இரண்டாம் சந்தேக நபரான பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணைகள் நடைபெற்று தடுப்பு காவலில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 குறித்த கொலை சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக் களத்தால் அரச சட்ட வாதியான தர்சிகா திருக்குமரநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது முச்சக்கர வண்டியில் பெறப்பட்ட ரத்த மாதிரியும், கொலை செய்யப்பட்ட நபரின் இரத்த மாதிரியும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போவதை தடயவியல் பொலிஸார் சாட்சியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

அத்துடன், மொட்டை விசை பாவித்ததன் மூலம் வெளிக்காயம் மற்றும் உட்காயம் ஏற்பட்டு குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சியம் மூலம் முதலாம் எதிரியான பொதுக் கிணறு வீதி தோணிக்கல்லைச் சேர்ந்த ஜேசுதாசன் இலங்கேஸ்வரன் தான் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அரச சட்டவாதியால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூப்பிக்கப்பட்டுள்ளதால், முதலாம் சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்தது டன், இரண்டாம் எதிரியான சந்தேக நபரை விடுவித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.