LOADING

Type to search

இலங்கை அரசியல்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் 3 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது

Share

-மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க பேட்டி:

மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்

(23-06-2024)

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று படகையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின்னர் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் படகுடன் ஒப்படைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து 22-06-2024 அன்று 507 விசைப்படகுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் 23-06-2024 அன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜஸ்டின், ரெயிமென்ட் மற்றும் கெரின் ஆகியோருக்கு சொந்தமான 3 மீன்பிடி விசைப் படைகளையும் அதில் இருந்த சுரேஷ் பாபு, காளிதாஸ், ரூபின், கண்ணன், நாகராஜன் உள்ளிட்ட 22 மீனவர்களை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் முதல் கட்ட விசாரணை செய்து பின்னர் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒப்படைக்கப்பட்டனர்.

ஒப்படைக்கப்பட்ட மீனவர்களுக்கு மலேரியா மற்றும் கொரோனா பரிசோதனை செய்த பின்னர் மீனவர்கள் அனைவரும் தற்போது யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணைக்குப் பின் மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

60 நாள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒரு வாரம் காலம் மட்டும் முடிவடைந்த நிலையில் இலங்கை கடற்படையினர் 22 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறை பிடித்து சென்றது ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று பிழைப்பிற்காக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.