காசாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் – டிரம்ப் அறிவிப்பு
Share
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் ஏற்பட்டது. 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போரினை முடிவுக்கு கொண்டு வர கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டன. நீண்ட முயற்சிக்கு பின்னர் போர் முடிவுக்கு வந்தது. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், கடந்த மாதம் முதல் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காசாவில் மெல்ல அமைதி திரும்பி வருகிறது. காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், போரை எப்படி முடிவுக்குக் கொண்டு வரலாம் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சில யோசனைகளை முன்வைத்து இருந்தார். அதில், காசா பகுதியில் இருந்து அதிகப்படியான பாலஸ்தீனிய அகதிகள் வெளியேறும் சூழலில் அவர்களை ஜோர்டான், எகிப்து மற்றும் இதர அரபு நாடுகள் அதிகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் கூறினார். ஆனால், இந்த கோரிக்கையை மத்திய கிழக்கு நாடுகள் நிராகரித்தன. இந்த சூழலில் அமெரிக்காவுக்கு வருகை தருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று, பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா சென்றிருந்தார். இதனைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசினர்.
காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு என்பதால் சர்வதேச அளவில் இது முக்கியத்துவம் பெற்றது. இந்த சந்திப்புக்கு பிறகு, வெள்ளை மாளிகையில் டோனால்டு டிரம்பும், பெஞ்சமின் நெதன்யாகுவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், “காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். அமெரிக்க படைகளை பயன்படுத்தவும் சாத்தியம் உள்ளது. காசா பகுதியில் உள்ள ஆபத்தான வெடிகுண்டுகள், ஆயுதங்களை அகற்றுவோம். சேதம் அடைந்த கட்டிடங்களை அகற்றி வளர்ச்சி பணிகளை உருவாக்குவோம். இதற்கு நாங்கள் பொறுப்பு. பொருளாதாரத்தை மேம்படுத்தி அந்த பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வீட்டு வசதி உள்ளிட்டவற்றை செய்து கொடுப்போம். தற்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக அப்பகுதியில் அமைதியை நிலையை நாட்டுவோம்” என்று கூறினார்.